Sunday, August 29, 2010

தேசத்தை விற்பவர்கள் தான்
தேசப்பற்று பேசுகிறார்கள்

திவிரவாதத்தை உருவாக்குபவர்கள் தான்
அதை ஒழிக்கவும் முற்படுகிறார்கள்

வறுமைக்கு காரணமானவர்கள் தான்
வறுமையை ஒழிக்கப்போவதாய் சொல்கிறார்கள்

அதிகாரம் இருந்தால்
ஆக்கலும் அழித்தலுக்கும்
அவரே கடவுள்

காத்தல் மட்டுமே
காது கேளாத
கண்ணற்ற கடவுளிடம்

சாமான்யர்களின் கடவுள்
என்றும்
அன்றன்றைய
உணவு தான்
----------------------------------


இருக்கலாம்
எவரிடமும்
யார் குறித்தும் புகார்

நல்ல டீ தராமல்
காசு வாங்குவதாக

நல்ல சாப்பாடு தராமல்
பணம் பறிப்பதாக

சிறுசிறு
புகார்கள்
சகலர்க்கும் உண்டு

புகாரற்றவர்கள்
புண்ணியாத்மாக்கள்
-----------------------------------------

எப்போதும்
எதையாவது செய்து கொண்டிருப்பது
வழக்கமாகிவிட்டது

இருத்தலின் அவஸ்தை
அனலாய் தகிக்கிறது
மூலையில்

செய்தி நிறுவனத்தில் பணியாற்றுவதும்
ஓயாது அரசியல் பேசுவதும்
நியாய தர்மங்களை விவாதிப்பதும்
கவிதை எழுதுவதும்
ஒன்றாகிப் போனது

சும்மா இருக்கும் சுகமறியேன்
---------------------------------------------

ஒரு சிசு கண்விழித்த நாளில்
அதற்கென்று
பேரில்லை
சாதியில்லை
மதமில்லை
யார் யார்
என்ன உறவென்றும்
சிசு அறியாது

வளர வளர
சகல தீயவைகளும்
விருப்பமில்லாமலே
கற்பிக்கப்படுகின்றன

ஆனாலும்
சிசு
வளர்ந்தே தீரும்
சிசு சிசுவாகவே இருக்கவோ
வளர்ந்தபின்
சிசுவாக மாறவோ
வாய்ப்பில்லை
ஒன்வே உலகில்
                              வித்யாஷங்கர்


Friday, August 20, 2010

makkal kural

முதல்வர் கலைஞர்
அல்லும் பகலும்
அயராது
மக்களுக்காக உழைக்கிறார்

மு.க.அழகிரி
சொல்கிறார்
மு.க.ஸ்டாலின்
சொல்கிறார்
மு.க.கனிமொழி
சொல்கிறார்.

Wednesday, August 18, 2010

konjam kavithaigal

இப்படியாக்கும்
அப்படியாக்கும்
விமர்சனங்கள்
எளிது
எப்படியாபட்டவர்களுக்கும்
தப்படி நேர்வது
தப்பாமல் நடக்கிறது
---------------------------------

இது மூதாதையர்
எறிந்த கல்

கல்லால் தீ மூட்டி கல்லிடுக்கில்
பானை வைத்து
கறிசமைத்து
சாப்பிட்ட கல்

அமரக்கல்
படுக்கக்கல்
கையில்கல்
கல் கடவுளானது
எப்போதும்
ஆயுதங்களே
காப்பவை
கல் கடவுளானது இப்படித்தான்
----------------------------------------------
உங்களிடமும்
இருக்கலாம்
அவரிடமும்
இவரிடமும் கூட இருக்கலாம்

எவரிடமும்
இல்லாத தொன்று

எல்லா உயிரும்
தனித் தனிதானே!

இப்படி செய்திருக்கலாம்
என்பது
செய்து முடித்தபின்பே
தெரிகிறது

முன்னும்
பின்னும்
முரணாகிக் கிடக்கிறது

என் குறிப்பு

பெயர் : துரை என்று அழைக்கப்படுகின்ற வெள்ளைத்துரை
புனைப்பெயர் : வித்யாஷங்கர்
வயது : 02.10.1955
பூர்வீகம் : கோவில்பட்டி
இருப்பது : 9, அய்யம்மாள் இல்லம் (வாடகை வீடு)
மண்டபம் ரோடு, முதல் தெரு,
கீழ்ப்பாக்கம், சென்னை 10.
வெளியான நூல்கள் : சந்நதம் (கவிதை)  1990

பனையோசை (கவிதை)  1994

கல்மண்டபத்து கிளிகள்  (கவிதை)  2004
விகடன் வெளியீடு  2004

சாமக்கொடை (கவிதை)  2006

கல்நாகம் (கவிதை)  2007

சௌபர்னிகாவின் நீண்ட கூந்தல் (சிறுகதைகள்)  2008
ரொமான்ஸ் ரகசியங்கள் (கட்டுரை)

பேசாமல் ஒரு நாளும் (2009)

சரியாக எழுதுவோம் (இதழியல் கட்டுரை) (2009)

சில கவிதைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நக்கீரன் நிறுவன ஆசிரியர் தொடர்ந்து ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் 30 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்
பிற பணிகள் : விகடன் பவளவிழா போட்டியில் 2 கவிதைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 2 ஆயிரம் பரிசு பெற்றது

உலகின் முதல் சமஸ்கிருதப் படமெடுத்த (ஆதிசங்கரா) இயக்குநர் ஜிவி.ஜயரின் உதவியாளர், இந்தியா முழுக்க பயணம், 1984ல் தேசிய விருதான தங்கப்பதக்கம் வென்றது.

‘பனையோசை’ திருப்பூர் தமிழ்சங்கம் விருது  2000

சாமக்கொடை ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருது  2007

சாகித்ய அகாடமி  6 கவிதைகளை இந்தியில் மொழி பெயர்த்தது

எம்.எஸ்.ராமசாமியின் இருபதாம் நூற்றாண்டு தமிழ் கவிதைகளில் 3 கவிதைகள்       ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது

எடிட்டிங் : கவிஞர் விக்ரமாதித்யனின் 10க்கும் மேற்பட்ட நூல்களின் தொகுப்பாசிரியர்
வர இருக்கும் நூல்கள்: ஐந்தருவி, தம்போலா
தற்போதைய பணி: வின்தொலைக்காட்சி குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ்நியூஸ் நாளிதழ் பொறுப்பாசிரியர்