Sunday, September 13, 2009

செய்தியாளன், நான்

கண்மூடி கண் திறப்பதற்குள்
மின்கசிவு வெள்ளமென்று
பரவிய வதந்தி
கூட்ட நெரிசலில்
பள்ளி பிஞ்சுகள் 6பேர் டெல்லியில் பலி!

நான்கு கல்லூரி மாணவர்களை
சுட்டுக் கொன்றதாக ஒரு சேதி!

நிலநடுக்கத்தில்
நூற்றுக்கணக்கானோர்
இறந்ததாக வேறொரு சேதி!

இருதயம் வெளித்தெரிய
பிறந்த குழந்தைக்கு
திரும்ப பொருத்தியதாக ஒரு சேதி!

இலங்கை முகாம்களில்
உணவின்றி தினமும்
பத்துக்கும் மேற்பட்டோர்
பலியாவதாக ஒரு சேதி!

விமான ஓட்டிகளின்
வேலை நிறுத்தத்தால்
பலகோடி நஷ;டமென்று ஒரு சேதி!

மழை பொய்த்ததால்
மனைவி மகளை
உத்தரப்பிரதேச விவசாயிகள்
விற்பதாக ஒரு சேதி!
நட்சத்திர விடுதியில்
குண்டு வெடித்ததில்
வெளிநாட்டவர் பலர்
இறந்ததாக ஒரு சேதி!

ரத்தவங்கிகளில்
கலப்பட ரத்தம் விற்பதாக ஒரு சேதி!

வற்றாத அம்மன்குளம்
அபார்ட்மெண்டாக மாறியதாக
படத்தோடு ஒரு சேதி!

ஆர்ப்பாட்டம் மறியல்
பேரணி முற்றுகையென்று
அடுக்கடுக்காய் செய்திகள்

கண்மூடி திறப்பதற்குள்
கடவுள்கூட சுடப்பட்டிருக்கலாம்

24ஒ7 சேனல்கள்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
செய்திகளை

டிபன் சாப்பிட்டபடி
குடித்தபடி புகைத்தபடி
காதலியோடு சிரித்தபடி
எப்படி எப்படியோ..

செய்திகளை செய்திகளாக மட்டுமே
பார்க்கப் பழகிவிட்டன ஜனங்கள்

அளவுக்கு மீறி நஞ்சான அமிர்தம்

செய்திகள்
மனநுட்பங்களை போக்கி
மரமாக்கிக் கொண்டிருக்கின்றன
மனிதர்களை

செய்வதற்கொன்றுமில்லை
ஒன்று விடாமல்
சேகரித்து தந்து கொண்டிருக்கிறேன்
செய்தியாளன், நான்
- வித்யாஷங்கர்

Thursday, September 10, 2009

வித்;யாஷங்கரின்வனதேவதாவும் காட்டிசைக்குறிப்புக்களும்

ஒளி தூரிகையின் அசைவில்
வண்ணங்களின் தாளலயத்தில்
நாடகம் விரிகிறது.
மவுனங்களின் மொழிக்குழைவால் பிறக்கிறது வன தேவதையின் பாடல்.
தேவதா தனது ஒளி நிறைந்த ஸ்தூல சரீரம் ஏந்தி பறந்து நடமாடுகின்றாள்;.
அவளது பறத்தலின் சிறகுகள் பின்னே ஒளி ஊடுருவி கண்ணாம் பூச்சியாடுகிறது.
மலை முகட்டில் பொங்கிப் பெருகும் அருவியோடு தேவதா வனமிறங்குகிறாள் நீரோடையின் இசைப்பெருக்கில் அவளது சிறகுகளின் அசைவால் பிறக்கிறது நாட்டியம் பிஞ்சு விரல்கள் கைதட்டல்களிலும் கண்சிமிட்டலிலும் தேவதா உற்சாகமாகி பறந்து பறந்து சிறகு விரித்தாடுகிறாள் பறவைகளின் கீச்சொலி சேர்ந்திசை அவளது நடனத்திற்கு பின்னணி இசை சேர்க்கிறது.
தேவதா அந்தச் சூரியனின் ரத்தச் சிவப்பில் இறக்கை தேய்த்து வண்ணமயமாய் ஆகாயம் தொடுகின்றாள்.
வனமலர்கள் தேன் ததும்ப மணம் வீசி தேவதாவுக்கு இதழ்விரித்து காத்திருக்கின்றன.
பழுத்த கனிகள் மணம் பரப்பி நெகிழ்ந்து அவளை உண்ண அழைக்கின்றன.
தேனடைகள் கசிகின்றன அவளின் நாட்டியத்தில் ஓயாத சிறகடிப்பில் சிலிக்கிறாள் தேவதா!!
தேவதாவின் வண்ணமயமான உலகில் குழந்தைகளின் கருவிழிகளில் பூத்த சிரிப்பும் இருளைக்கிழித்து ஒளியேற்றுகிறது.
எங்கும்.

காடுகளின் இசை தனியானது நகரின் சப்தங்களிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு வனப் பெருவெளியும் தனக்கான தனி இசையை ஓங்கி உயர்ந்த மலைகளின் மௌனம் போல் காத்து வருகிறது.அருவிகள் சிற்றோடைகளுக்கு இடையே உயர்ந்து பெருத்து வளர்ந்த மரங்களின் அசைவில் காற்றின் கானம் பிறக்கும் விலங்குகளின் வாழ்பியல்போடு கூடியது அந்த இசை காற்றின் திசைகளில் தாளலயம் கூட்டிப்பிறப்பது.
பறவைகளின் கீச்சாட்டத்தை விலங்குகளின் பிளிறலை ஓசையற்ற காலடித்தடங்களை பதுங்கு குகைகளின் வாசணையோடு பரவுவது காட்டிசை.
மலைமக்களின் இதயத்துடிப்போடு இயைந்து அவர்களின் மூங்கில் துளைக்குள் பெருகுகிறாள் வனதேவதாபயிர்களுக்கென்றும் புல்லுக்கும், மலருக்கும், மரங்களுக்கும் என்று தனித்தனி இசைக்குறிப்புக்களை கொண்டது காட்டிசை ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை ஓடைக்கும் அருவிக்கும் வெவ்வேறு இசைக்குறிப்புக்கள்.
வனதேவதையின் இசைக்குறிப்;புக்களில் சித்தர்களின் மௌன மந்திரங்கள் உள்ளடங்கி காற்றை நிறைக்கின்றது.
வன இசைக்குள் வாழ்தலின் இனிமையும், மூலிகைகளின் காற்றுப்பெருக்கில் இதயசுத்திக்கான இசையொலி பெருகிறது.

Monday, August 31, 2009

காத்திருத்தல்!

காத்திருத்தல்!

ஏதொன்றுக்கும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது
எப்போதும் ...

காலைக்கடன் கழிக்க
யாரேனும் கழிவறையில் இருந்தால்
யாரேனும் தினசரி படித்தால்
யாரேனும் குளித்துக்கொண்டிருந்தால்
பேருந்துக்காக
இருக்கை கிடைப்பதற்காக
இப்படி சில்லரை காத்திருத்தலில்லாமல்

சனி பெயர்ச்சிக்காக.
குரு பெயர்ச்சிக்காக,
திசை மாற்றத்திற்காக
காத்திருத்தல் வேறு

உதவுகிறேன் என்றவர்
பதிலுக்காக
நோய் குணமாக
பதவி உயர்வு வர
ஊதிய உயர்வுபெற

உரியவரை தொடர்புகொள்ள
காத்திருக்கும்படி செல்ஃபோன் தெரிவிக்கிறது
தூக்குப்போட புறப்பட்டவன்
என்ன ஆனான்
நாளை வரை காத்திருக்கும்படி
தொலைக்காட்சி தொடர் சொல்கிறது.

மாதக்கணக்கில் நடந்த போட்டியில்
யார் வென்றது
முடிவு அடுத்தவாரம் என்று அறிவித்து விடுகிறார்கள்
எல்லையில் பிடிபட்டவர்
தப்பினாரா? இல்லையா?
அடுத்த இதழில் என்கிறார்கள்

எதற்காவது
எப்போதும்
காத்திருத்தல்
நித்ய கர்மம்
நீண்ட துயர்

எதற்காகவும்
காத்திருக்க
வேண்டாதவர்
எத்தனைபேர்
இப்புவியில்?

பூவிழுமா? தலைவிழுமா?
சுண்டிவிட்ட காசு அந்தரத்தில்

விழுமா? விழாதா?
காத்திருக்கிறேன்
நெடுங்காலமாக ......
- வித்யாஷங்கர் -

Wednesday, August 19, 2009

மனிதர்கள் பார்க்க மட்டுமே

விதியயென்றுதான்
சொல்ல வேண்டும்
வேறு எதுவுமே தெரியாமல்
எழுத வந்தது

பரபரப்பாய்
அதிர்ச்சியூட்டுவதாய்
வருடிக்கொடுப்பதாய்
வழிகாட்டுவதாய்

சர்க்கஸ் கலைஞனின்
சாகசம் போல்
பேப்பர்களில் முளைத்த
பெருமரம்

இதில் கனிந்த காய்களோ
கனிகளோ
வாயில் வைக்க முடியாத
கைப்போடு இருக்கிறது
இது பேய்களுக்கான
கனிகள்
மனிதர்கள் பார்க்க மட்டுமே
வித்யாஷங்கர்

பேருக்குத்தான் பெயர்

சிற்றருவி
பேரருவி
ஐந்தருவி
பேர் என்னவானாலும்
அருவி ஆறாகாது
அதனதன் வேகமும்
தன்மையும்
அதனதன் இயல்பு
பேருக்குத்தான் பெயர்

வித்யாஷங்கர்

Friday, June 12, 2009

'பேசாமல் ஒருநாளும்'

(தமிழன் பதிப்பக வெளியீடாக வரும் 'பேசாமல் ஒருநாளும்' கவிதைத்
தொகுப்பில் இருந்து சில......)

1.பேச்சு

1. பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
எப்போதும் பேசாமல் இருக்கமுடிவதில்லை எவராலும்
பேச்சில்தான் விளைகிறது வன்மமும், கேலியும் வறட்டு கவுரவமும்
நாவரளப் பேசி நாடாள்வோர் மத்தியில்
பேசிப் பேசியே பேருவகை அடைகிறது வெகு ஜனம்
ஒரு பேச்சுக்கு சொன்னேன்
புகார் ஒன்றுமி;ல்லை


2. மரங்களோடு பேசாமல்
ஒருநாள்கூட கழிக்க முடியாது என்னால்
மரக்கடைகள் கசாப்புக்கடைகள்
அதிகாலை வேளையில் சோம்பல் முறித்து
சிலிர்க்கும் இலைகளின் மலர்ச்சி
சோர்வுற்று மாலையில் மூடிக்கொள்ளும் தளர்ச்சி
வேர்முதல் இலைவரை மழையில் நனைந்த மகிழ்ச்சி
பல கோணங்களிலும்
பேச அவற்றோடு பேசிக்கழிக்க
பகிர நிறைய உண்டு
தினமொரு ஐந்து நிமிடமாவது
பேசாமல் கழித்ததில்லை
ஒருநாளையும்
உங்களது மரமும் சினேகமும் எப்படி?

3.பேச்சற்றிருப்பது பெரும் பேறு
துறவிகளும் தொழிலதிபர்களும் மட்டுமே
பேச்சை குறைத்து அதிகாரமாக்குகிறார்கள்
நடுத்தர வர்க்க நகரமாந்தர்கள்
பேசாமல் பிழைப்பை ஓட்ட முடிவதில்லை
அரசியல் வாதிக்கு கவசமாய்
வியாபாரிக்கு கற்பக விருட்;சமாய்
அதிகாரிக்கு ஏவுதலாய்
விளிம்பு நிலை மாந்தர்க்கு வேதனை வேடிக்கையாய்
குழந்தைகளுக்கு குதுகலிப்பாய்
வெற்றிபெற்றவர்களின் சாகசமாய்
தோற்றவர்களின் துயரமாய்
பேச்சு எங்கும் பேச்சு என்பதே ஆச்சு

4.கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது
அவன் வருத்தம்
வாங்கிக்கொண்டே இருக்க நேருகிறதே
இவன் வருத்தம்
அவரவர் வருத்தத்திற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள்

பேச்சு போச்சு
----------------------------
1.தேவைகள் கோரிக்கைகள் உதவி நாடுவதால்
உறவினர்களோடு பேச்சை குறைத்தாயிற்று
பண நெருக்கடியால்
பண உதவி கேட்க நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்
நண்பர்கள் சந்திப்பை தவிர்த்தாயிற்று
அன்றாட அலுவலக வேலையும் இம்சையும் சலிப்புமாய்
தனக்குத்தான் பேசித்தான்
தீர்க்க வேண்டியிருக்கிறது மனக் கசப்பை

2.கிழக்கு வாசல் புத்திரருக்கு நல்லது
வடக்குப் பார்த்த பீரோ வருவாய் அதிகரிக்கும்
வாஸ்து சொல்லும் திசை எட்டுக்கும் பலனுண்டு
எட்டடி குச்சுக்குள் கைவீசி நடக்க மாட்டாமல் கழியும் காலம்

அவரவர்
--------------------
1.பெரும் பணக்காரருக்கு
பிள்ளை இல்லாதது பிரச்சனை
பெருங்குடும்பங்களுக்கு
பிள்ளைகளால் பிரச்சனை
அதிகாரம் இ;ல்லை! அங்கீகாரம் இல்லை!
ஆஸ்தியில்லை! ஆரோக்கியம் இல்லை!
ஏகமாய் பிரச்சனைகள் எல்லோருக்கும்!
பிரச்சனைகள் பிரச்சனைகள் தான்
அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெருசு!

Monday, June 8, 2009

சாமக்கொடை

பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- வித்யாஷங்கர்
(ஆனந்த விகடன் முத்திரை கவிதை)

Thursday, June 4, 2009

பழஞ்செருப்புகள்

காலணிகள் காணாமல் போவது
யாரையும் ஒரு கணம்
நிலை குலையச்செய்து விடுகிறது

வனவாசம் புறப்பட்ட ராமனின்
பாதுகையை வேண்டி வாங்கியதும்
கல்லிலும் முள்ளிலும் நடக்க விட்டதும்
பாதுகாபபிஷேகம் செய்ததும்
பரதன் கால அரசியல்

புஷ் முதல் சிதம்பரம் வரை
செருப்பு வீச்சில் தப்பியது
இனஒழிப்பு ஆதங்க
அரசியல் வெளிப்பாடு

கல்யாண வீடுகலில்
காலணி களவு போவதும்
கவலையோடு ஒருவர்
வெறுங்காலில் நடப்பதும்
அரசியல் தூண்டிய
காலாகால அவஸ்தைகள்

காலணிதான் என்றாலும்
கனவு போனபின்
கனவிலும் வந்து
தூக்கம் கெடுக்கிறது
பழஞ்செருப்புகள்
-வித்யாஷங்கர்

Friday, May 29, 2009

2008 கார்த்திகை 27 புதிய தொகுப்பு

இது கடசியுத்தத்தின் ஆரம்ப

பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்

விளைந்துக்கொண்டேன் !

எங்கும் போக முடியாதபடி
யாரையும் பார்க்க முடியாதபடி
கட்டப்பட்டிருக்கிறது
என் காலகள்
குடும்பச்சங்கிலியால்

யாருடைய சந்தோஷமும்
யாருடைய துக்கமும்
பகிர்ந்துகொள்ளக்கூடிய
மனநிலையிலில்லை

எனது மேய்ச்சல் நிலங்கள்
முளைக்குச்சியில் அடித்த
கயிற்றின் நீளத்தில்
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது

விடுதலை வேட்கையோ
வெருண்டெழுவதோயில்லை

மேய்ச்சல் நிலங்களுக்குள்
விளைந்துக்கொண்டேன்
எனது பசியையும் கனவையும்

- வித்யாஷங்கர்
22/05/09

Thursday, May 28, 2009

பிரபாகரன்

இறுதித்தமிழன் இருக்கும் வரைக்கும்
இருக்கும் உன் பெயரும்
ஆய்த எழுத்தாய் !