Sunday, September 13, 2009

செய்தியாளன், நான்

கண்மூடி கண் திறப்பதற்குள்
மின்கசிவு வெள்ளமென்று
பரவிய வதந்தி
கூட்ட நெரிசலில்
பள்ளி பிஞ்சுகள் 6பேர் டெல்லியில் பலி!

நான்கு கல்லூரி மாணவர்களை
சுட்டுக் கொன்றதாக ஒரு சேதி!

நிலநடுக்கத்தில்
நூற்றுக்கணக்கானோர்
இறந்ததாக வேறொரு சேதி!

இருதயம் வெளித்தெரிய
பிறந்த குழந்தைக்கு
திரும்ப பொருத்தியதாக ஒரு சேதி!

இலங்கை முகாம்களில்
உணவின்றி தினமும்
பத்துக்கும் மேற்பட்டோர்
பலியாவதாக ஒரு சேதி!

விமான ஓட்டிகளின்
வேலை நிறுத்தத்தால்
பலகோடி நஷ;டமென்று ஒரு சேதி!

மழை பொய்த்ததால்
மனைவி மகளை
உத்தரப்பிரதேச விவசாயிகள்
விற்பதாக ஒரு சேதி!
நட்சத்திர விடுதியில்
குண்டு வெடித்ததில்
வெளிநாட்டவர் பலர்
இறந்ததாக ஒரு சேதி!

ரத்தவங்கிகளில்
கலப்பட ரத்தம் விற்பதாக ஒரு சேதி!

வற்றாத அம்மன்குளம்
அபார்ட்மெண்டாக மாறியதாக
படத்தோடு ஒரு சேதி!

ஆர்ப்பாட்டம் மறியல்
பேரணி முற்றுகையென்று
அடுக்கடுக்காய் செய்திகள்

கண்மூடி திறப்பதற்குள்
கடவுள்கூட சுடப்பட்டிருக்கலாம்

24ஒ7 சேனல்கள்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
செய்திகளை

டிபன் சாப்பிட்டபடி
குடித்தபடி புகைத்தபடி
காதலியோடு சிரித்தபடி
எப்படி எப்படியோ..

செய்திகளை செய்திகளாக மட்டுமே
பார்க்கப் பழகிவிட்டன ஜனங்கள்

அளவுக்கு மீறி நஞ்சான அமிர்தம்

செய்திகள்
மனநுட்பங்களை போக்கி
மரமாக்கிக் கொண்டிருக்கின்றன
மனிதர்களை

செய்வதற்கொன்றுமில்லை
ஒன்று விடாமல்
சேகரித்து தந்து கொண்டிருக்கிறேன்
செய்தியாளன், நான்
- வித்யாஷங்கர்

Thursday, September 10, 2009

வித்;யாஷங்கரின்வனதேவதாவும் காட்டிசைக்குறிப்புக்களும்

ஒளி தூரிகையின் அசைவில்
வண்ணங்களின் தாளலயத்தில்
நாடகம் விரிகிறது.
மவுனங்களின் மொழிக்குழைவால் பிறக்கிறது வன தேவதையின் பாடல்.
தேவதா தனது ஒளி நிறைந்த ஸ்தூல சரீரம் ஏந்தி பறந்து நடமாடுகின்றாள்;.
அவளது பறத்தலின் சிறகுகள் பின்னே ஒளி ஊடுருவி கண்ணாம் பூச்சியாடுகிறது.
மலை முகட்டில் பொங்கிப் பெருகும் அருவியோடு தேவதா வனமிறங்குகிறாள் நீரோடையின் இசைப்பெருக்கில் அவளது சிறகுகளின் அசைவால் பிறக்கிறது நாட்டியம் பிஞ்சு விரல்கள் கைதட்டல்களிலும் கண்சிமிட்டலிலும் தேவதா உற்சாகமாகி பறந்து பறந்து சிறகு விரித்தாடுகிறாள் பறவைகளின் கீச்சொலி சேர்ந்திசை அவளது நடனத்திற்கு பின்னணி இசை சேர்க்கிறது.
தேவதா அந்தச் சூரியனின் ரத்தச் சிவப்பில் இறக்கை தேய்த்து வண்ணமயமாய் ஆகாயம் தொடுகின்றாள்.
வனமலர்கள் தேன் ததும்ப மணம் வீசி தேவதாவுக்கு இதழ்விரித்து காத்திருக்கின்றன.
பழுத்த கனிகள் மணம் பரப்பி நெகிழ்ந்து அவளை உண்ண அழைக்கின்றன.
தேனடைகள் கசிகின்றன அவளின் நாட்டியத்தில் ஓயாத சிறகடிப்பில் சிலிக்கிறாள் தேவதா!!
தேவதாவின் வண்ணமயமான உலகில் குழந்தைகளின் கருவிழிகளில் பூத்த சிரிப்பும் இருளைக்கிழித்து ஒளியேற்றுகிறது.
எங்கும்.

காடுகளின் இசை தனியானது நகரின் சப்தங்களிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு வனப் பெருவெளியும் தனக்கான தனி இசையை ஓங்கி உயர்ந்த மலைகளின் மௌனம் போல் காத்து வருகிறது.அருவிகள் சிற்றோடைகளுக்கு இடையே உயர்ந்து பெருத்து வளர்ந்த மரங்களின் அசைவில் காற்றின் கானம் பிறக்கும் விலங்குகளின் வாழ்பியல்போடு கூடியது அந்த இசை காற்றின் திசைகளில் தாளலயம் கூட்டிப்பிறப்பது.
பறவைகளின் கீச்சாட்டத்தை விலங்குகளின் பிளிறலை ஓசையற்ற காலடித்தடங்களை பதுங்கு குகைகளின் வாசணையோடு பரவுவது காட்டிசை.
மலைமக்களின் இதயத்துடிப்போடு இயைந்து அவர்களின் மூங்கில் துளைக்குள் பெருகுகிறாள் வனதேவதாபயிர்களுக்கென்றும் புல்லுக்கும், மலருக்கும், மரங்களுக்கும் என்று தனித்தனி இசைக்குறிப்புக்களை கொண்டது காட்டிசை ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை ஓடைக்கும் அருவிக்கும் வெவ்வேறு இசைக்குறிப்புக்கள்.
வனதேவதையின் இசைக்குறிப்;புக்களில் சித்தர்களின் மௌன மந்திரங்கள் உள்ளடங்கி காற்றை நிறைக்கின்றது.
வன இசைக்குள் வாழ்தலின் இனிமையும், மூலிகைகளின் காற்றுப்பெருக்கில் இதயசுத்திக்கான இசையொலி பெருகிறது.