Monday, March 14, 2011

கோணங்கி எனும் எழுத்துச்சிற்பி!



தமிழில்  ஒரு எழுத்துக்காரன் வருகை.
சிந்துபாத் தொடங்கி ஜெயமோகன் வரை
எத்தனையோ பேரின் படைப்புகளை படித்தாயிற்று
அவற்றில் பலவும் திரும்ப படிக்கும்படியாக
தூண்டவில்லை
திரும்பத் திரும்ப படிக்கவும், ஒவ்வொரு
முறையும் புதுவாசிப்பனுபவத்தை தருகிற
எழுத்தாக இருக்கிறது கோணங்கியின் எழுத்து

லா.சா.ரா. மௌளியின் வகையிலான
எழுத்து என்று கோணங்கியின் எழுத்தை
வரிசை கட்டிவிட முடியாது.
இதுதனி, தமிழுக்கு புதுசு. சுத்த சுயம்புவான
ஒற்றையடிப் பாதை.
கோணங்கியின் சலூன் நாற்காலியில்
சுழன்றபடி தொகுப்பிலுள்ள மீண்டும்
ஆண்டாளின் தெருக்களில்
மௌனத்தின் அடியில் நொறுங்கிய
சிருஷ்டிகளின் அதிர்வு. உளியின் பதிவுகள்
கரையான் தின்ற ஏடுகளில் உளியின்கோடு.
உளியின் தொகுதி ஒன்று கல்லில் பதுங்கிய பூதம்.
மூல உயிரென மைய இருள் நோக்கி தெறிந்த
வில்திறம் அதிரஅதி அலைஅலையாய் நூறாயிரம்
கல் மண்டபங்கள் தூண்கள் எல்லாம்
பேசாதிருந்த சிலை, கல்லின் பானவு விரக்தியின்
ஊற்று கல்லில் ஒளிரேகை இருளில் புகுந்து
அடிக்குரலில் குழுறும் புறா ஒன்றின் சோகமென
ஊமையான சிலை முகம். புறங்கள் தோறும்
அடைகிறது.

கர்ப்பகிரஹ இருளில் திரிகள் எரிகின்றன.
கிளியஞ்சட்டி தீபங்கள் கொண்டு வந்த மகளிர்
சூழ்ந்து வர அலபீடு கோபுரவாசல் சிற்பிகள் வாழும்
புஷ்பவனத் தெரு. கூட்டமாய் உறங்கும் மரங்கள்
கீழே ஊர்ந்து நகர்கிற நதி
கோவிலில் சிற்பங்களை பார்த்து நுட்பம் கண்டு
வியந்து, திகைத்து நெகிழ்கிறோம், அடடா இப்படி
இதழ் கடையோரம் குறுநகை, சுவாசிக்கிற நாசி,
சிரிக்கிற கண், குழைந்து நெகிழ்ந்த முன்கை,
இலையென படர்ந்த வயிறு, சற்றே சரிந்த முலை
உருட்டி எடுத்த நெகிழ்ச்சியோடு பிருஷ்டம்...
இவை எல்லாவற்றையும் கதைகளில் வரி வரியாய்
செதுக்கியிருக்கிறார் கோணங்கி
ஒற்றை வரிக்குள் ஒராயிரம் கதை, கவிதைகள்
பொதியக்கிடக்கிறது.
கல் மண்டபங்கள் தூண்கள் எல்லாம்
பேசாதிருந்த சிலை.
கல்லின் பாணஷ விரக்தியின் ஊற்று.
வரிவரியாய் செதுக்கிக்கட்டுகிற மாயக் கதைகளுக்குள்
வாசிப்பவன் வசியப்பட்டு உள் இழுத்துச்
செல்லப்படுகிறான்.

நாதஸ்வரஸ்வரங்களுள் லயிக்கிறவனின்
மோனம், வாசிப்பின் இறக்கம்.
நவீன இலக்கியத்தில் கோணங்கியின்
எழுத்துக்கள் சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
ஆதிபாம்பு.
கிராமத்துப்புழுதியோடு மேனாட்டூ
சிந்தனைகளும் உட்புகுந்து கோணங்கி
எனும் கலைஞனின் கைவரிகளில்
எழுத்து சிற்பங்களாய் நின்று வியக்கவைத்து
திகைப்பூட்டி புற வாழ்விலிருந்து நிலை குளைய
வைக்கியது
பல எழுத்தாளர்களின் ஒரு சில கதைகள் நம்மை வெளியே
விடாமல் நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில்
பிடித்து வைத்துக் கொள்வதுண்டு.
கோணங்கியின் ஒவ்வொரு வரிகளும், அடுத்தவரிக்குப் போக
விடாமல் பிடித்தாட்டுகிறது. ஒற்றை வரியே எங்கெங்கோ
இழுத்துப் போய் மனசை அலைக்கழிக்கிறது.
ஒவ்வொரு கதையும் புது வெள்ளத்தில் நிந்தி தத்தளித்து
கரையோறும் பரவசத்தை தருகின்றன.
இனி வருங்கால தலைமுறைக்கான
வாசிப்பு தளம்கோணங்கி.
காலங்கடந்து புதுமைப்பித்தன் கண்டு
கொண்டது போல
கோணங்கியை கண்டு கொள்ளாமல்
விட்டால்
இழப்பு தமிழ் சமூகத்திற்குத்தான்
கோணங்கிக்கு இல்லை.
அவனொரு சித்தன். இப்போதும் இருப்பில் இல்லை.
அவனுக்கு இறப்புமில்லை.
அவன் தனது ஒவ்வொரு சொட்டு
உயிர்த்துளியையும் வரி வடிவங்களாக
மாற்றி தமிழில் நடைபாதை விரித்து விட்டான்.
அதில் நடந்து பாருங்கள். தமிழையும்
உங்களையும் புதிதாக புதிய அனுபவமாக
உணர்வீர்கள்.

1 comment: