Wednesday, January 26, 2011

தனியன்......





முன்பின்

அறிமுகமில்லை தான்

ஆனாலும் அவரது

பேச்சின் வசீகரத்தில்

தூரம் தொலைந்து போனது



அவரது ஊர் வந்ததும்

அவர் இறங்கிவிட்டார்

அவ்வளவு பயணிகளை

சுமந்து செல்லும் ரயிலில்



சட்டென

தனியானானேன்



இப்படித்தான்

பணி நிமித்தமாக

வசதி வாய்ப்பால்

பலரும் பிரிகிறார்கள்



எப்போதும்

என்னை

தனியனாக்கி.......

வித்யாஷங்கர்



ஊனம்



நகரின்

பிரதானச் சாலையில்

இருப்பார்

இரு காலும் ஊனமுற்றவர்



அவர் முன் துணியொன்று

விரித்துக் கிடக்கும்

சில்லரைகளோடு



எப்போதேனும்

அவரைக் கடக்கும்போது

சில்லரை இல்லாதபோது

குற்றவுணர்வோடு

பார்வையைச் செலுத்தி

நடப்பேன்



அவரிடமும் ஒரு

போலீஸ்கார புண்ணியவான்

மாமூல் வாங்கிச் செல்வதை

பார்த்த பின்

அவராக இல்லாதிருப்பதில்

ஆறுதலடைந்தேன்.

வித்யாஷங்கர்

1 comment: