Monday, October 1, 2012

review


மொழியின் உச்சம் கவிதை, தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட, இடதுசாரி இயக்கங்கள்.
மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும் இருப்பது கவிதை!
காதலை பொய் என்றாயே
கவிதையை கள்ளச் சொல் என்றாயே
அன்று பிரியும் வேளையில்
உண் கண்கள் கலங்கியதென்ன
காதல் அல்லாமல்
வார்த்தையின் வனப்புதான்
என்ன கவிதையல்லாமல்
என்ற கு.பா.ராவின் கவிதைகளிலிருந்து எளிய நேரடித் தண்மை கைவரப்பெற்று எனது அனுபவங்களை கவிதை என்று எழுதி வருகிறேன்.
தினமும் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் வாழும் எனக்கு கவிதை எழுதுவது - ஆசுவாசுமானதளம்.
எந்த கட்டுப்பாடோ ஒழுங்கோ அற்று எனது உள்தெறிப்பை கவிதையாக எழுதுகிறேன். அதை பத்திரிகைகளுக்கு அனுப்புவதோ புத்தகமாக வெளியிடுவதோ கூட எனக்கு ஆர்வமற்றது. விக்ரமாதித்யன் கேட்டுக் கொண்டதற்காக எழுதியது, அவருக்கு கிடைத்த அனுப்பியது என்பதுதான் எனது வெளியீட்டுத்தளம். யுகபாரதி பலமுறை போனில் கேட்டு வெளியானதும் உண்டு.
சமீபகாலமாக அம்ரா பாண்டியன் அதை செய்கிறார். பேஸ்புக் வந்த பின் அவ்வப்போது நானே அதில் எழுதிவிடுகிறேன்.
கவிதை எழுதுவது என்பது எனக்கான தனித்த மது அருந்தும் அறை. அதில் உலகமில்லை; அப்போது நான் உலகில் இல்லை.
சமீபத்தில் எழுதி வரும் உவப்பான கவிஞர்களுள் ஒருவராக செல்வராஜ் ஜெகதீசன் படுகிறார். அவரது நான்காவது சிங்கம் அவரை இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.
சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப்போன அந்தக் கணத்தைச் சொற்களில் எப்படிச் சொல்லி விட முடியும்?
அங்காடியொன்றில் காணாமல் போன தினம் அவனது இருப்பை அறிவித்ததும் அந்த பாய் தான்.
உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு
தேவிகா சுப்ரமணியம் கவிதை, ஏற்புடையதாய், எல்லாமே இப்படி, சுப்ரமணியின் கேள்விகள், எதிர் விளையாட்டு, ஆசைமுகம், உயிரோசை சிலருக்காவது, கவிசாம்ராட், இப்படி பல தலைப்பு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
பெற்றோரைப் பேணாத
பிள்ளையென்ன பிள்ளை?
பேரீரைச்சல் இல்லாத
அருவியென்ன அருவி?
பேரின்பம் காணாத
பிறவியென்ன பிறவி?
சிற்றின்பம் துறக்காத
துறவி யென்ன துறவி?
மனைவியர் நோகப் பண்ணும்
கணவனென்ன கணவன்?
மனதில் கல்மிஷம் கொண்டவையும்
பிறப்பென்ன பிறப்பு?
விமர்சனங்களைத் தாங்காத
கலைஞன் என்ன கலைஞன்?
பழைய வடிவுக்குள் அடக்கி
விடக்கூடியதாயினும் இதுவே
உங்களது வெளிப்பாடான
பூரண கவிதையாக எனக்குப்படுகிறது.
குழந்தையை பிரிந்து
தொலைதூரத்தில் வாழும் தந்தையின்
பதற்றமாக, பல கவிதைகளில்
பையன்களை பதிவு செய்திருப்பது
தங்களது பாசத்தின் ஆழத்தை
காட்டுகிறது.
நீங்கள் கண்டடைந்து வீட்டீர்கள்;
தொடர்ந்து எழுதுங்கள்; சேர்வுறாதீர்கள்.
அயம் இன்னும் கூர்மையுறும் போது
கவிதை உங்களை வந்தடையும்
உங்கள்
வித்யாஷங்கர்

Wednesday, May 9, 2012

3


மூன்றாவது நபரின் வருகை
நம் முகங்களில்
பூசி விடுகிறது
ஒப்பனையை
நாம் விரும்பாமலே
வித்யாஷங்கர்

Saturday, April 14, 2012

kavithai

நகம் கடித்தல்
கால் ஆட்டுதல்
தலை சொரிதல்
பல்லிடுக்கை துலாவுதல்
இப்படி யார் யாரோ
எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்
எதையாவதுசெய்யாமல்
எவராலும் இருக்க முடிவதில்லை
சும்மா இருக்கும்
சுகமறிந்தவர்
என்ன செய்வார்
சும்மா இருப்பார்
------------வித்யா ஷங்கர்

Monday, January 23, 2012

KAVITHIGAL

வீடோ நிலமோ
விட்டுப் போயிருந்தால்
பங்கு பாகம் பிரிப்பதில்
சண்டையிருக்கும்


கடன் சமை
விட்டுப் போயிருந்தால்
தீர்ப்பதில்
சண்டையிருக்கும்


எதுவுமே
விட்டுப்போவதாக
முதாதையார் நினைவு
தை அமாவாசையில்
சடங்காக வந்து போகும்
இவனுக்கு

பாவம் அவர்கள்
இவனுந்தான்
வித்யாஷங்கர்



*துயரங்கள் சுமப்பவன்
வெகு துõரப் பயணம்
இளைப்பாறுதற்று


இலக்கை கொலைத்தவிட்டு
ஓட்டம்


யாரோ எதுவோ
துரத்துகிற அச்சம்

கானல்நீரில்
தாகம் தணிக்கும்
எத்தனம்


உப்புச் சாலையில்
கொப்பளிக்கும் கால்கள்

நதிகளையும்
பேரருவிகளையும் விழுங்கிய
பாலைப் பயணம்

ஒற்றைக் குயிலின்
சோக கீதம்

இன்னொரு உதயம்
இன்னோரு நாள்

இன்னொரு நாள்
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
வித்யாஷங்கர்


*எனக்கு கிடைத்தது
இப்படி என்கிறான்


இருளிலிருந்தே
எடுத்தேன் என்கிறான்

வியர்வையில்
விளைத்த முத்து என்கிறான்

இருளில்
வியர்வையில்
வேரில் தேடியும்
கிடைக்காதவன்
சொல்கிறான்

இருந்தால்தானே கிடைக்க
இல்லவே இல்லை என்கிறாள்

வித்யாஷங்கர்

Thursday, January 19, 2012

நன்மைகோணங்கிக்கு போன் செய்தேன்
நகுலன் பேசினார் 
நகுலன் இருக்கிறாரா என்றேன் 
இல்லை என்றார் 

நெல்லையில் 
கல்யாண்ஜியும் 
விக்ரமாதித்யனும் 
பேசி முடித்து 
விச்ராந்தியாய் அமர்ந்திருந்தனர் 

முருகபூபதியும் 
கோணங்கியும் 
குருமலை போய்
மூலிகை தேடி போயிருப்பதாகவும் 
தேவதச்சன்  சொன்னார் 
கூடவே அந்த மூலிகை கிடைப்பது 
அவ்வளவு   எளிதில்லை 
மௌனி அதை உண்டதாகவும் 
தெரிவித்தார் 

எங்களது  பேச்சை 
ஜன்னல் வழியே 
சமயவேல்  பார்த்து கொண்டிருப்பதாக 
கலாப்ரியா சொல்லிவிட்டு 
வித்யாஷங்கர்  என்று அழைத்திருக்கிறார் 
என் காதில் விழாமல் போயிற்று 
அருவி  இரைச்சலில்....
===========வித்யாஷங்கர்