Tuesday, September 28, 2010

பத்திரிகையாளராக...

பத்திரிகையாளராக அடிப்படை தகுதி எப்போதுமே சமூக அக்கறை இருக்க வேண்டும்.


ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல என்ற மனப்பாங்குள்ளவர் பத்திரிகையாளராக முடியாது.

முதலில் சமூக அக்கறை தேவை. அது ஒவ்வொருவர் கொள்ளும் கொள்கை கோட்பாடு, அரசியல் சார்பால் வெவ்வெறு விதமாக வெளிப்படும்.

நித்யானந்தா விவகாரத்தையே எடுத்துக் கொண்டால்

அவர் இந்து சாமியார் என்பதால் தான் இழிவுப்படுத்துகிறார்கள்! அவர் பிராமணல்லாதவர், தமிழன் என்பதால் தாக்கப்படுகிறார்! என்ற கோணத்தில் பார்ப்பவர்களும் எழுதுபவர்களும் கூட இருக்கிறார்கள்.

ஒவ்வொரு செய்தியை வெளிப்படுத்துவதிலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு நபருக்கும் கோணங்கள் வேறுபடும்.

சத்துணவில் 5 முட்டை வழங்கப்படும் என்பது சில நாளேடுகளில் தலைப்புச் செய்தி வேறு சில நாளேடுகளில் எங்கோ ஒரு மூலையில் கூட இடம் பெறும்.

சில ஏடுகள் இப்படியொரு செய்தியை வெளியிடாமல் கூட ஒதுக்கும்.

தற்போதுள்ள மீடியாக்களில் பலவும் அரசு ஆதரவு அல்லது அரசு எதிர்ப்பு என்ற இரட்டை நிலைபாட்டோடு பட்டவர்த்தனமாக இயங்குவதை பார்க்க முடியும்.

இலங்கைத் தமிழர் விவாகாரத்தில் தமிழ் பத்திரிகைகள் போட்டிபோட்டுக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் செய்தி வெளியிட்டது பல திரைக்கதைகளை மிஞ்சிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் வேண்டாம் என்று ஒரு பிரிவும், வேண்டும் என்று ஒரு பிரிவும் எழுதியும், அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால் தேர்தல் முடிவுகள் மட்டும் பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பை பொய்யாக்கி விடுகிறதே ஏன் என்ற கேள்வி எழலாம்.

பொது ஜனங்கள், தங்களது கருத்துக்களை முன்வைக்க கிடைக்கிற ஒரே வாய்ப்பு தேர்தல் தான். அவர்கள் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளாமல் இல்லை. அது குறித்து அபிப்ராயமில்லாமலில்லை. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டு விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு தினசரி வாழ்க்கை போக்கு பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.

இந்த பொது ஜனப்பார்வையோடு துணிந்து கருத்துக்களை முன்வைப்பவர்களே பத்திரிகையாளர்களாக முடியும்.

விவரங்களை சேர்ப்பதில் கூடுதல் ஆர்வம் தேவை. ஒரு அமைச்சர் பெயரைச் சொன்னவுடன் அவர் அரசியல் வாழ்க்கை எப்படித் தொடங்கியது? அதற்குமுன் அவர் என்னவாக இருந்தார். யார் மூலம் அரசியலுக்கு வந்தார்? எந்தக்கட்சியில் என்ன பொறுப்பிலிருந்தார். பின் எப்போது வேறு கட்சிக்கு தாவினார்? என்னென்ன பதவிகள் வகித்தார்? இப்போது என்னவாக இருக்கிறார்? அவரது குடும்ப பின்னணி? சாதியப் பின்னணி? படிப்பு என்று அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அன்றாடம் செய்திகளை படித்துக் கொண்டு அது குறித்த அபிப்ராயங்களை ஏற்படுத்திக் கொண்டும் என்பதான தொடர்ந்த செயல்பாட்டின் மூலமே தேர்ந்த பத்திரிகையாளனாகத் திகழ முடியும்.

Sunday, September 26, 2010

செல்போன் கலாச்சாரம்

நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்தது செல்போன். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் பலரும் தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

நீங்கள் எப்படி வெளிப்படவிரும்புகிறீர்கள் அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என சில உண்டு.

இப்போதெல்லாம் பெண்களில் பலர் காதில் வளையம் அணிவது போல ஹெட்போனோடு இருப்பதையே பார்க்க முடிகிறது. பேருந்தில் யாருடனோ பேசிக் கொண்டே பயணிக்கிறார்கள். கண்டக்டர் பாவம் யார் டிக்கெட் வாங்கணும் என்று கரடியாக கத்தி ஓய்ந்து ஸ்டேஜ் கடந்த பிறகு சாவகாசமாக டிக்கெட் கேட்கும் பெண்கள் பலரை பார்க்க முடிகிறது.

* பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி செல்போனில் பேசியபடியே பேருந்தில் ஏறுவதும் இறங்குவதையும் பார்க்கும் போது மனசு பகீரென்கிறது.

* பேருந்தில் செல்போனில் பேசும்போது சத்தமாக, தான் ஊருக்குப் போவதையும் எதிர் வீட்டில் வீட்டுச்சாவியை கொடுத்திருப்பதையும், திரும்ப நாலுநாள் ஆகும் என்பதையும் தெளிவாகத் தெரிவித்து திருடனுக்கு வெல்கம் சொல்பவர் பலரும் உண்டு.

* கூட்டம் நிறைந்த பேருந்தில், ரயில்களில் பலர் ஆபாசப்பாடல்களை செல்போனில் சத்தமாகப் போட்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.

* கோவிலில் வலம் வரும் போது ஒருவருடைய செல்போன் ‘இச்சுத்தா இச்சுத் தா’ என்று கெட்ட பாட்டை ஒலிப்பது அந்தச் சூழலை பாழ் பண்ணுகிறது.

* ஒரு அலுவலகத்தில் இறந்த ஊழியர் ஒருவருக்காக எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஒரு நிமிடம் மவுனம் காத்தனர். அப்போது ஒருவருடைய செல்போனில் ‘அப்படிபோடு போடு’ என்று ஒலித்து அந்த சூழலையே கெடுத்துவிட்டது.

* சிலர் நம்மை பார்ப்பதற்காக, பேசுவதற்காக வருவார்கள். நம்மோடு இருக்கும் பத்து நிமிடத்தில் நாலைந்து அழைப்புகளுக்கு பதில் அளிப்பார் (விலாவாரியாக) ‘அப்புறம் பேசறேன் இப்ப ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று சொல்வதுதான் நாம் சந்திக்கச் சென்றவருக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். மற்றது, அவரை அவமதிப்பதாகும்.

* சிலர் என்னை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று நட்போடு எண் தருவார். ஆனால் அவரை பத்து நாட்கள், பலமுறை தொடர்பு கொண்டாலும் போனில் கிடைக்க மாட்டார். இது நட்புக்கு ஏற்படுத்தப்படும் அவமரியாதை.

* ஒரு முறையாவது தொடர்பு கொண்டு நானே உங்களை இன்னும் சிலநாளில், சிலமணித்துளியில், ஒரு வாரத்தில் தொடர்பு கொள்கிறேன்; இப்போது வேறு ஒரு வேலையில் பிசியாக உள்ளேன். ஸாரி என்று தெரிவித்தால் உங்கள் மதிப்பு அவரிடம் உயரும். நீங்கள் ஒருவரிடம் அவசரமாக பேச நினைத்து மீண்டும் மீண்டும் அவரது எண்ணில் அழைத்து அவர் பேச மறுக்கிறபோதுதான் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்வீர்கள்.

* ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் சத்தமாக பேசுவது, அநாகரீகம் மட்டுமல்ல, மற்றவர்களை பாதிக்கக் கூடியதுமாகும். பெண் பார்க்கப் போகிற ஒரு குடும்பம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க, பக்கத்தில் ஒருவர் போனில், ‘அட அந்த குடும்பம் கருமாந்திரம் பிடிச்ச குடும்பம்டா; அப்படியொரு தரித்திரியம்’ என்று பேசியதைக் கேட்டு அபசகுனமாக இருப்பதாக கருதி திரும்பிய சம்பவம் கூட கேள்விப்பட்டதுண்டு.

* சிலர் நாகரிகமற்ற முறையில் சுற்றியுள்ளவர்களை பொருட்படுத்தாமல் யாரையாவது திட்டுவது... அவன் பொறுக்கி... குருடன்... அயோக்கியன் அவனை வெட்டணும், குத்தணும் என்பது. சிலர் தன் காதலியுடன் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு கூடவுள்ள பலரும் கேட்கும்படி செய்கிறார்கள். இது தெரிந்தால் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடுபடும். இப்படியா அந்தரங்கத்தை அசிங்கப்படுத்துவது.

* செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பதை தாண்டி பந்தாவுக்கான சாதனமாக பலரால் கருதப்படுகிறது. ஒரு பிரமுகர் வரும்போது கூடவே ஒருவர் நாலைந்து செல்போனோடு அவருடன் கோவில் பிரசாதம் ஏந்திவருவது போல வருவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

* இப்போதெல்லாம் ரிங்டோன் வகையறாக்களில் அலுத்துப் போன பலர் பழைய டிரிங்.. டிரிங்.. சத்தமே டீசன்ட் என்று மாறிவருவது ஆறுதலான விஷயம்.

* இப்போது நேரும் பல விபத்துக்களின் பின்னணியில் எமனாக இருப்பது செல்போன் தான் என்பது வேதனைக்குரியது.

* செல்போனை எந்த இடத்தில் ஆப் செய்ய வேண்டும் என்பது தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.

* மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனில் சிலர் பேசுவது நோயாளிகளை மேலும் பாதிக்கும்.

* இந்த நவீன யுகத்திலும் செல்போன் வைத்துக் கொள்ளாதவரை என்ன சொல்ல பாக்யவான் தான் அவர்.



(நாளையும் சில...........)

தகுமா தாமதம்?

ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் எந்தவொரு உயிரும், எந்த உயிரை விடவும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது.

முதலில் மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொருவரும் தன்னை நேசிக்க வேண்டியது அவசியம்.

இங்கு நீ என்பது ஒருவன் மேற்கொள்ளும் தொழில் அதில் அவன் காட்டும் ஈடுபாடு. அதில் அவனது நுட்பம், அதனால் விளையும் பயன்பாட்டைப் பொறுத்தே அவனது தகுதி அல்லது உயரம் நிர்ணயிக்கப்படுகிறது.

வயிற்றுப் பிழைப்பிற்காக ஒருவன் மேற்கொள்ளும் தொழில் வேறு; ஒருவன் தேர்ந்தெடுக்கும் தொழில் என்பது வேறு.

கயிற்றில் இரு கம்புகளுக்கிடையே நடக்கிற கழைக் கூத்தாடி சிறுமிக்கு அதுவே இரண்டுமாக அமைந்துள்ளது.

அதற்கென அவள் மேற்கொண்ட பயிற்சி, மெய் வருத்தம், நுட்பம் எல்லாம் சேர்ந்து அதை கலையாகவும் மாற்றுகிறது. இது ஒவ்வொரு தொழில் புரிபவருக்கும் பொருந்தும்.

ஒரு விவசாயியின் வேலைநேரம் என்பதை இயற்கையே தீர்மானிக்கிறது. சூர்யோதயத்திற்கு முன்பே தண்ணீர் பாய்ச்சி, சூரியன் வந்ததும் ஓய்வெடுக்கப் போவதும், நெல் பயிர் முற்றிய நிலையில் வயலிலேயே இராவெல்லாம் கண்விழித்து களவு போகாமல் காவல் காப்பதும் என்று அவனது வேலை நேரத்தை இயற்கையே தீர்மானிக்கிறது. இதில் எந்த வேலை தாமதமானாலும் நேரடியாக விவசாயி பாதிக்கப்படுவதால் அவனுக்கு தெரியும் நேரத்தின் அருமை.

நகர வாழ்க்கையும், இங்குள்ள தொழில் முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டமிடலில் யாரேனும் ஒருவர் மேற்கொள்ளும் தவறு மற்றவரையும் பாதிக்கும்.

பனிரெண்டு பக்க நாளிதழை 20 பேர் சேர்ந்து தயாரிக்கும் போது, ஒருவர் மட்டும் தனது பக்கத்தை தாமதமாக முடித்தால் அதனால் ஏற்படும் தாமதம் மற்றவர்களின் உழைப்பையும் இழிவுபடுத்தும்.

அச்சாக தாமதமாகும், விநியோகம் தாமதமாகும், விற்பனை பாதிக்கும். அவசர கதியில் செயல்படுவதால் நேர்த்தி தவறும், பிழைகள் கூடும். சரியான நேரத்திற்கு பேப்பர் பார்சல் போய்ச் சேராது; இங்கு ஒருவரின் தாமதம் 400வது கிலோமீட்டரில் பேப்பர் சப்ளைக்காக காத்திருக்கிறவர் வரை பாதிக்கும்.

தாமதம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

காலையில் செய்தித் தாளை புரட்டும் போதே மனதில் இன்று என்னென்ன நிகழ்வுகள் நடக்கிறது? இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்ற திட்டமிடல் இருக்க வேண்டும்.

இன்று முதல்வர் தஞ்சையிலிருக்கிறார். இன்று இன்னார் பிறந்த நாள், இன்று இந்த தீர்ப்பு வருகிறது. நகரில் இங்கு இது தொடர்பாக பேரணி நடக்கிறது என்று அடுக்கடுக்கான தகவல்களில் சேகரம் மூளையில் பதிவாசி இருக்க வேண்டும்.

இந்த முன் தயாரிப்பு இல்லாமல் பணிக்கு வருபவரால்தான் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் தானும் திண்டாடி, மற்றவர்களுக்கும் திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறார்.

நீங்கள் மிகச்சிறந்த பாடகராக இருக்கலாம்; கவிஞராக இருக்கலாம்; பேச்சாளராக இருக்கலாம்; கணித மேதையாக இருக்கலாம்; விஞ்ஞானியாக இருக்கலாம்;

அதுவெல்லாம் நீங்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கு எப்படி பயன்படுகிறது என்பதுதான் உங்களை அடையாளப்படுத்தும்.

ஒரு காவல் துறை அதிகாரி நன்றாக நடனம் ஆடுவார்; நன்றாக கதை எழுதுவார் என்பது பெருமையாகாது.

அவர் தனது துறையில் செய்த சாதனைகளே அவருக்கு பெருமை சேர்க்கும்.

ஒரு நடிகன்நடிக்க மட்டும் தெரியாமல்எதைச் செய்தாலும் அவன் முதலமைச்சரேயானாலும் அவன் தொழில் துரோகியாகவே கருதப்படுவான்.

அவர் அரசியலை அக்குவேறு ஆணிவேறாக விவாதிப்பார்; மேடைகளில் நன்றாகப் பேசுவார், என்பவர் தான் அறிந்ததை நாலுபேர் புரியும்படி எழுதத் தெரியவில்லை என்றால் அவர் பத்திரிகையாளரே கிடையாது.

அவர் பேருந்து ஓட்டுனரை ஏன் சரியாக எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்றோ, ஒரு டாக்டரை சரியாக எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்றோ யாரும் கேட்கப் போவதில்லை.

எழுத்து துறையில் எழுதவந்துவிட்டு சரியாக ஒரு விஷயத்தை எழுதத் தெரிவில்லையென்றால் நாலுபேர் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகிற மாதிரிதான் கேட்பார்கள்.

அதற்கு பதில் சொல்லியாக வேண்டிய கடமை, எழுதுகிறவருக்கு இருக்கிறது.

எழுத்து என்பது ஒன்றும் பிறப்பிலேயே, கருவிலேயே உருவானது அல்ல.

கூர்ந்த கவனிப்பும், தொடர்ந்த வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் இருந்தால் எவரும் எழுதமுடியும்.

சிறப்பாக எழுத

பாராட்டும்படி எழுத

அனுபவமும், கூடுதல் பயிற்சியும்தான் தேவை.

எழுத்து என்பது எந்த ஜாதிக்கோ, மதத்திற்கோ மட்டும் சொந்தமானதல்ல.

“என் முன்னோர்கள் நாலுவரியில் சொல்லியதை என்னால் மூன்று வரியில் சொல்லி புரிய வைக்க முடியுமானால் அது நல்ல எழுத்து” என்பார் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

வெறும் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் எதையுமேஎவருடைய எழுத்து நடையையும்படிக்காமல் நானும் எழுதுவேன் என்று எழுதினார். அந்த எழுத்துக்கு வரவேற்பும் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

தமிழில் வ.ரா., ஏ.என்.சிவராமன், சுப்புடு, புதுமைப்பித்தன், மறைந்த கார்க்கி, அறந்தை நாராயணன், இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் சோலை, சின்னக்குத்தூசி, இதில் ஜெயகாந்தன் கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களை போன்ற ஜாம்பவான்களின் கட்டுரைகள் இன்றைக்கும் படித்து ரசிக்கக் கூடியகாலங்கடந்த புதையல்கள்!

அலுவலக கலாச்சாரம்

அலுவலகம் என்பது பல்வேறு குணாதிசயங்களை கொண்ட பணியாளர்களின் சங்கமம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சேர்ந்திசையே இங்கு எல்லோர் மத்தியிலும் லயத்தை ஏற்படுத்துகிறது. லயம் யாராவது ஒருவரால் பாதிக்கப்பட்டாலும் சுருதி பேதம் தவிர்க்க முடியாது.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை சில உண்டு.

* போனிலோ, செல்போனிலோ பேசும்போது மற்றவர் கவனத்தை குலைக்காத வண்ணம் குரலைத் தாழ்த்திப் பேசுங்கள்.

* உங்கள் முகத்திற்கு நேரே சத்தம் போடதய்யா, நாங்க வேலை பார்க்க வேண்டாமா என்று பலர் கேட்கத் தயங்கி முணுமுணுக்கலாம். அப்படி யாரேனும் கேட்பதற்கு முன் இத்தகைய சூழலை தவிர்க்கலாமே.

* உங்களது விவாதம் எதுவானாலும் யாரோடு விவாதிக்க விரும்புகிறீர்களோ அவரை மட்டும் அழைத்து குரலை தாழ்த்தி பேசுங்கள். உங்கள் விவாதம் மற்றவர்களின் வேலையை பாதிக்காதபடி இருக்கட்டும்.

*அலுவலகம் என்பது அதற்காக மயான அமைதி நிலவவேண்டிய இடமோ, தியேட்டர், பார் போல ஆரவாரம் இடம் பெறவேண்டிய இடமோ அல்ல.

* சிறு சிறு நல விசாரிப்புகள், பணிக் குறிப்புகளை பகிர்ந்து கொள்வது, நகைச்சுவை பரிமாற்றம் இதெல்லாம் அவசியமே. இதுவும் இல்லையென்றால் ராணுவத்தில் பணியாற்றுவது போல ஆகிவிடும்.

* அலுவலகத்தில் பணிக்கு வருகிறவர்கள் ஓரளவு மன முதிர்ச்சி பெற்றவர்களே. (அப்படித்தான் கருதப்படுகிறது) உயர் அதிகாரிகளோ, நிர்வாகத்தினரோ குறை சொல்கிற மாதிரி நடப்பதை நாமே தவிர்ப்பது நமக்கு கவுரவத்தை தரும்.

* ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கும். அதை கடைப்பிடிக்க வேண்டியது பணியாளர்களின் கடமை.

* நேரந்தவறாமை, அடையாள அட்டை அணிவது முக்கியம்.

* அடிக்கடி காலதாமதமாக வருவது, காலதாமதத்திற்கு காரணம் சொல்வது, அடிக்கடி விடுப்பு எடுப்பது, இதெல்லாம் உங்கள் மீது அவநம்பிக்கையை நிர்வாகத்திடம் ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் நீங்கள் வேலையை விட்டு நீக்கப்படும் அபாயத்திலேயே இருப்பீர்கள். வேலை தொடங்கும் நேரத்தில் போன் மூலம் விடுப்பு தெரிவிப்பதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே தாமதம், விடுப்பு ஆகியவற்றை தெரிவிப்பது நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய உதவும்.

* சக ஊழியர்களின் வேலைகளில் வழிகாட்டுவது, பகிர்ந்து கொள்வது, விரைந்து முடிக்க உதவுவது, ஊழியர்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தும்.

* எந்த நேரத்திலும் இவரை அணுகினால் எந்த தகவலாக இருந்தாலும் பெறலாம் என்ற அபிப்ராயம் நிர்வாகத்திற்கு ஏற்படும்படி நடந்து கொண்டால் நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றம் நிச்சயம்.

* அலுவலக தொலைபேசியை சுருக்கமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

* இணையத்தள பயன்பாடு தவிர்க்க முடியாதது. இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவசரத் தேவைக்கு தகவலறிய பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததே.

* தங்களது இருக்கையை விட்டு அடிக்கடி காணாமல் போகிற ஒருவர் மீது நிர்வாகம் எப்போதும் பரிவு காட்டாது.

* நாலைந்து பேராக டீ குடிக்கப் போவது சாப்பிடப் போவதை தவிர்த்து அதற்கென உரிய நேரத்தில் வெளியே சென்று வருவதே மரியாதையை ஏற்படுத்தும்.

* எனக்கு உரக்கப் பேசினால் தான் விவாதித்த திருப்தி ஏற்படும் என்றால் நிச்சயம் சக ஊழியர்களால் மனசுக்குள் சபிக்கப்படுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

* அலுவலகத்தில் எல்லோரும் ஒரே சீரான அனுபவம், திறமை பெற்றிருக்க வாய்ப்பில்லை. சிறு சிறு குறைகளுக்கெல்லாம் சத்தம்போட்டு அமர்க்களப் படுத்தாமல், அந்த வேலையை உங்கள் போக்கில் செய்து முடித்துவிட்டு இப்படித்தான் செய்யணும், நீங்கள் செய்ததில் இதெல்லாம் தவறு என்று விளக்குங்கள் இன்றில்லை என்றுமே அவர் உங்களை மறக்க மாட்டார்.

* எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவரோ, எதுவுமே தெரியாதவர் என்று ஒருவரோ கிடையாது. குறைவாகத் தெரிந்தவர், கூடுதலாகத் தெரிந்தவர்கள் மட்டுமே உண்டு.

* ஈகோ பார்க்காமல் தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது உங்களது வேலை சுமையை குறைக்கக் கூட உதவும். அதைவிடுத்து இது கூட தெரியலே என்று திரும்பத்திரும்பச் சொன்னால் இருவருக்குமிடையே தேவையற்ற வெறுப்புதான் வளரும். அதே போல தெரியாததை ஈகோ பார்க்காமல் கேட்டுத் தெரிந்து கொள்வது வேலை திறமையை கூட்டுவதோடு நல்லுறவையும் ஏற்படுத்தும்.

* அலுவலகத்திற்கு நீங்கள் அணிந்து வரும் உடை உங்கள் நிறுவனத்தின் மீது மரியாதையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். சீரமைக்கப்படாத கலைந்த தலையும், சீர் குலைந்த உடையும் உங்களது கவுரவத்தை மட்டுமல்ல, நிறுவன கவுரவத்தையும் பாதிக்கும்.

* தொழிற்சாலைக்கு செல்கிறவர் எப்படி அதற்கான ஆயுதங்களோடு செல்வது அவசியமோ அப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் கருவிகள்.

* பத்திரிகை அலுவலகத்திற்கு பேனா எடுத்துச் செல்லாதவர் பார்பர் ஷாப்பிற்கு கத்தி எடுத்துவராத சவரத் தொழிலாளி போலத்தான் கருதப்படுவார்.

* அந்தந்த தொழிலுக்கான அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஸ்பேனரை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தொழிற்சாலையில் வேலை பார்க்க முடியாது.

* அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமில்லாதவர் ஊடகத்துறையில் எக்காலத்திலும் பிரகாசிக்க முடியாது. பொது நிறுவனங்களில் வேலை பார்ப்போர் தங்களது மத, ஜாதி சின்னங்களை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* நெற்றி நிறைய பட்டையணிந்த காவல்துறை அதிகாரியை ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ தயக்கத்துடனேயே அணுகுவர். இதே போலத்தான் நாத்திகவாதம் பேசுவதும். உங்கள் கருத்துக்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு மேன்மையானதாக நல்லதாக இருந்தாலும் மற்றவர் அனுமதியின்றி திணிக்காதீர்கள்.

* அலுவலகம், உங்கள் பிரச்சார மேடை அல்ல என்பதை மனதிற்கொண்டு செயல்படுங்கள்.

* தெரிந்தவர், தெரியாதவருக்கு சொல்லிக் கொடுத்து வழி நடத்துங்கள். தெரியாதவர், தெரிந்தவரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* அலுவலகம் வெறும் வேலை பார்க்கும் இடமாக மட்டுமல்லாமல் தினமும் புதிதுபுதிதாக தெரிந்து கொள்ளும் பல்கலைக்கழகமாகவும் திகழும்.



(நாளையும் சில...........)

Tuesday, September 21, 2010

படைப்பிலக்கிய எழுத்துக்கள்

எழுதப்படாத இசைக்குறிப்புகள் காற்றில் பரவி இசைக்கிறது கலைஞனின் நாபிக்கமலத்தில்.

எழுத்து வசீகர மந்திர மாயை அதனுள் ஒளிந்தும் வெளிப்பட்டும் பூடகமாய் நிகழும்; நிழல் ஒவியம் கலையாய் விரிகிறது.

வனாந்திர காற்றின் ஓசையில் பேரருவியின் இரைச்சலில் நதியின் ஓயா சல சலப்பில் கடலின் அலைகளின் ஆரவாரத்தில் வார்த்தைகள் மயங்கி முழ்கி தெரிவிக்கிறது சந்தோஷ துக்கங்களை.

மொழியற்ற மொழிக்குள் கூத்துக்குள் நிகழ்கிறது கலை கோட்டுக்குள் பிடிபடாத ஓவியமாய் உளிக்கு தட்டுப்படாத சிற்பமாய், ஆட்டத்தை மீறி வரும் லயமாய், பிறந்த குழந்தையின் அசைவில் கண்ணில் இருக்கிற மொழிக்குள் பிறக்கிறது. எவனும் கண்டறிந்து தெரிவிக்காத கலை. அதை கலைப்படுத்தும் கவனத்தில் சிதைகிறது கலை. ஒழுங்கில் அல்ல. ஒழுங்கற்ற ஒரு லயத்தில் தகிக்கிறது கலை.

ஒழுங்குகளுக்குள் சமூகமும் மதமும் கடவுளும் இருக்க முடியும். கலை இவைகளுக்கு அப்பாற்பட்டது.

திட்டமிடுதலிலிருந்து நழுவி ஓடி திகைப்பூட்டுபவை. திடீரென தோனில் தொற்றும் வண்ணத்துப்பூச்சி. மேகம் திரளாது பூக்கிற வானவில்.

பூஜ்யங்களுக்குள்ளிலிருந்து பிறக்கிற புதிர் கணிதம். சொல்லியவை சொல்லாதவை இணைந்த சொற்பரப்பு. எழுதப்படாத இடை வெளிகளுக்குள் அர்த்தம் கூட்டும் கலை.

கோவில்களில் யாளியின் தொன்மத்திலிருக்கிறது. கலைஞனின் மிஸ்டிக். படைப்பாக்கத்தின் வியப்பாக இன்னமும் கோவில்களில் இருந்து கொண்டிருக்கிறது பார்க்கப்படாத யாளி.

லெமுரியாவில் இருந்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகள் எதுவும் தென்படவில்லை. யாளி என்றொரு பெயர் மட்டும் உச்சரிப்பில் இருக்கிறது. காலங்கடந்த வியப்பாய்.

அவமான அவமதிப்பில் பிறக்கிறது ஆர்வம். போர்களில் பிறக்கிறது யுத்தி. தொடர் ஒட்டப் பந்தயத்தில் உனது கையிலுள்ள வெற்றி இன்னொருவன் கைக்கு மாறுவது நிச்சயம். காலம் கைமாற்றும் காத்திரு.

நதிகளின் வேகத்தை கணக்கிட்டு குளிக்க முடியாது. வேகம் அதன் இயல்பு.

முழுக்கவும் மூளை பலம் இழந்து சுயபிரக்ஞை அழிவுற்ற நிலையின் சூன்யத்தில் கருவெடுக்கிறது கலை. சுழல், சுழல் மட்டுமே லயம். லயத்தில் திளைக்கிற மனசில் விஸ்வரூபம் காட்டுகிறது கலை. தானழிந்த வேளையில் தலை தூக்குகிறது கலை. பார்வையற்றவனின் பார்வைக்கும் விரிகிறது கலை உலகம்.

எழுத்து மூளையில் உதிக்கலாம். ஆனால் கலை இதயத்தில் பிறக்கிறது. மூளையின் இயக்கமற்ற தளத்தில் இதய லயத்தில் பிறக்கிறது, இதய லய சூட்சமம் பெருகி எழுத்தின் இடைவெளிகளில் கலையாகிறது. கோவில் பிரகாரங்களுக்கும் கர்ப்பகிரகத்துக்கு மிடையிலான விசாலப் பெருவெளி அமைதியாய் பிறக்கிறது.

வெளித் தெரியும் உருவம் வேறு, உள் வேறு, உள் அறிந்தால் உரு மாறும். உள் அறிய எழுத்து ஒரு மூலம் திருமூலம். உன்னை இழந்தால் உள் அறியலாம்.

வார்த்தைகளுக்குள் இடைவெளியில் சிதம்பர ரகசியம் கலை. வெட்டவெளியை உருவாக்கி வியக்கவைக்கும். புதுப்புது அர்த்தங்களை பிறப்பித்து உன்னை தன்னோடு பயணிக்க வைக்கும் மாந்தீரிக பாதை, வசியம். எழுதின மனசோடு படிக்கிற மனசை இழுத்துச் செல்வது. இரு மனங்களின் சங்கமத்தில் பதியமாகிறது உருவாக்கம். இருளும் ஒளியுமாய் நிழல் கீற்றாய் கண்ணாடிஒளிச்சிதறலாய். வனாந்திரத்தின் ஊடான புலியின் கால் தட சித்திரமாய் விபரிதம் விளைவிக்கும்.

Sunday, September 19, 2010

பிஸ்கெட் பாபா தரிசனம்

2009ல் திடீரென தொடர்ந்து தினமும் எழுதுவது என்று முடிவெடுத்து நாளுக்கு பத்து குறளுக்கு நடைக்கேற்ற உரையை எழுதினேன். 1330 குறளும் எழுதி முடித்து தமிழன் டி.வி.யில் விட்டு வைத்திருந்தேன்.


ஓவியர் ஜானி அங்கிருந்து விலகியபோது நான் கேட்டுக் கொண்டதால் எடுத்து வந்து வைத்திருந்தார்.

இது நடந்து ஒரு வருஷமாச்சு. நேற்று வாசு போனில் பேசி அதை புத்தகமாக வெளியிடலாம் என்று கேட்டான்.

இன்று (ஞாயிறு) காலை வாசு வீட்டிற்கு வர, இருவருமாக பைக்கில் ஜானியை பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

ஜானி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலருகே காத்திருப்பதாகச் சொன்னார்.

இருவரும் அவரைச் சந்தித்து குறளுரை எழுதிய டைரியை வாங்கிக் கொண்டு பேசிவிட்டு புறப்பட்டோம்.

சட்டென வாசு, நேற்று போனில் பேசும் போது வடபழனியில் யாரையோ பார்க்கனும்னு சொன்னீங்களே என்றான்.

ஆமா, வடபழனி கோவில் பக்கத்துல ஒரு சாமியார் இருப்பதாகவும் போய் பார்க்கும் படியும் அண்ணாச்சி (விக்ரமாதித்யன்) கடந்த 6 மாதமாக வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்தேன். பைக் வடபழனி நோக்கி திருப்பப்பட்டது.

பைக்கில் போய் கோவிலுக்கு முன்பு இறங்கினோம். அங்கே பொம்மைக் கடை வைத்திருந்த ஒருவரிடம் சாமியார் பற்றிக் கேட்டேன் அவர் எதிரே இருந்த சந்தொன்றை காட்சி அதுக்குள்ளதான் இருக்கார் போங்க என்றார்.

வாசு அருகிலிருந்த கடையில் சால்ட் ரொட்டி கேட்டான். கடைக்காரர் ஸ்வீட் ரொட்டி தான் இருப்பதாகச் சொன்னதும, நாலைந்து கடை தள்ளியிருந்த பேக்கரிக்கு கூட்டிப் போனான்.

பால்கோவா நூறு போடு என்று கேட்டான் வாசு.

எவ்வளவு என்று கேட்டு 30 ரூபாய் என்றதும் நூற்றம்பது போடு என்றான். கூடவே சால்ட் ரொட்டி பாக்கெட் ஒன்றும் வாங்கிக் கொண்டான்.

ஒரு ஆள் போக வரக்கூடிய சந்து உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் சற்றே உள்வாங்கிய எட்டடிக்கும் குறைவான நீல அகலமுள்ள அறை வாசலில் காத்திருந்த நாலைந்து பேரில் போங்க என்றார்.

அறை வாசலில் இருவரும் நின்றோம்.

சுவாமி ஜி, நாற்காலியில் சாய்ந்து கால்களை முன் இருந்த ஸ்டுலில் நீட்டியபடி வேட்டியும் மேலுக்கு வெள்ளை துண்டும், தாடியும், கலைந்த தலையுமாய் இருந்தார். அவரது இடப்பக்கம் சுவாமி ஜி, படத்தின் கீழ் வரிசையாக அடுக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் அவரது கைக்கெட்டும் தூரத்தில் மாலை அணிவிக்கப்பட்ட இன்னொரு பாபா படம் அதன்முன் ஸ்டாண்டிலும் பிஸ்கெட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது.

கீழே தரையில் இடப்பக்கம் இருவர் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி கீழே அமர்ந்திருந்த ஒருவரிடம் குனிந்து ஏதோ கூறிவிட்டு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்து கிளம்பு என்றார்.

அவர் வெளியேறியதும், நானும் வாசுவும் போய் அமர்ந்தோம். பால்கோவாவை கையில் வாங்கிய அவர் அதை தனக்கு இடப்பக்கம் வைப்பதா சற்றே தள்ளியுள்ள பாபா படத்திற்கு வைப்பதா என்று கைகளை முன்னும் பின்னுமாக நகர்த்தியதில் சற்றே குழப்பம் தெரிந்தது. பின்னர் அவரே ஒரு முடிவுக்கு வந்து பாபா பட ஸ்டாண்டில் வைத்தார்.

தனக்குத்தானே இரண்டாயிரம் என்று சொல்லிக் கொண்டவர் வாசுவை நோக்கி ஏற்கனவே வந்த இரண்டாயிரம், இரண்டாயிரம் டூ ஹென்ட்ரட் குடு என்றார்.

வாசு எழுந்து பர்ஸிலிருந்து 2 நூறு தாள்களை கொடுத்தான். அதை மறுபடி மறுபடி எண்ணிப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை அவனது கையில் கொடுத்து கிளம்பு என்றார்.

நான் வாசுவிடமிருந்து டைரியை வாங்கி சுவாமி ஜியிடம் கொடுத்தேன். அட்டையை கண்ணருகே வைத்து கூர்ந்து பார்த்துவிட்டு திருப்பித்தா என்று என்னிடம் நீட்டினார். நான் பக்கங்களை புரட்டும் விதமாக டைரியை மாற்றி திருப்பி அவரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தேன்.

முதல் சில பக்கங்களை புரட்டிப் பார்த்தார். அவரது வாய்கல் ஒடு....கல்....ஒடு.. பால்கோவா என்றது காதில் விழுந்தது.

என்பக்கம் திருப்பி டைரியை கையில் கொடுத்து கிளம்பு என்றார்.

டைரியை வாங்கிக் கொண்டு வெளியேறி பின்னாலிருந்து குழாயில் தண்ணீரெடுத்து கால்களை கழுவிவிட்டு புறப்பட்டேன்.

வாசு பைக்கில் என்னை கூட்டி வந்து அலுவலகத்தில் விட்டுச் சென்றான்.

வழியெல்லாம் சதுரகிரி சித்தர் மலை குறித்து வியக்கவைக்கும் செய்திகளை சொல்லிக் கொண்டு வந்தான்.

2+2 என்பதாக மட்டும் வாழ்க்கை இல்லை. எப்படியோ அண்ணாச்சி பார்க்க வற்புறுத்திய பாபாவை பார்த்தாச்சு. ஆனால் அவரது பெயர் மட்டும் ஏனோ நினைவுக்கு வரமறுக்கிறது. (பரஞ்ஜோதி பாபா என்று அண்ணாச்சி சொல்லியதாக நினைவு) எனக்கு தராவிட்டாலும் பிஸ்கெட் பாபாவாக இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

Friday, September 17, 2010

அம்மாவின் திதியும் அண்ணாச்சியோடு குற்றாலக் குளியலும்

(தொடர்ச்சி)


திங்களன்று காலையிலேயே முரளி போன் அடித்து புறப்பட்டுவிட்டதாக தகவல் சொன்னார்.

நான் எர்னர்ஸ்ட் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் படித்து முடிந்துவிட்டு குளித்து பஸ்ஸ்டாண்டுக்கு பேக் கோடு புறப்பட்டு வந்தேன். காலையில் தங்கை சாப்பிடச் சொல்லியும், வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.

ஒன்பது மணிவாக்கில் முரளி வந்ததும் ஒரு கப் காப்பியோடு நெல்லை பேருந்தில் ஏறினோம். ஒரு மணி நேரப்பயணம் மீண்டும் ஆளுக்கொரு கப் காப்பி, சிகரெட் முடித்து தென்காசி பேருந்தில் பயணம்.

11 மணிவாக்கில் தென்காசி போஸ்டாபிஸ் ஸ்டாப்பில் நம்பியண்ணன் போனில் கேட்டுக் கொண்டபடி இறங்கி சிகரெட் பற்றவைத்தோம்.

சிகரெட்டை குடிப்பதற்குள் அண்ணாச்சி வந்துவிட்டார். சிறு உபச்சார விசாரிப்புக்கு பின் பரதன் தியேட்டர் தாண்டி அவரது வீட்டை அடைந்தோம். இருவரும் பாத்ரூமை கேட்டு சிறு உபாதையை தீர்த்துக் கொண்டோம்.

கையில் எடுத்துச் சென்ற அவரது புத்தகங்களை கொடுத்தான். சென்னையில் அவரது அறையில் விட்டிருந்த எனது பேண்ட், ஷர்ட்களை அவர் ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். கூடவேஒரு பேன்சி டீ ஷர்ட்டையும் கொடுத்தார். அருவியில் குளித்துவிட்டு அதை அணிந்துக்கொண்டு தான் போட்டோவில் நிற்கிறேன்.

அவர் ஒரு துண்டு மட்டும் எடுத்துக் கொள்ள வீட்டைப் பூட்டிக்கிளம்பினோம். மதினியை பள்ளியில் சந்தித்து செல்போனையும் சாவியையும் ஒப்படைக்க நாங்கள் போன நேரம் பள்ளி விட்டிருந்தது.

திரும்ப வீடு நோக்கி நடந்தோம். காசி விஸ்வநாதர் ஆலய வாசல் ஆட்டோ ஸ்பிஸ்டருகே மதினியும் எங்களை தேடி வந்து கொண்டிருந்தார்.

நலவிசாரிப்புக்குப் பின் அண்ணாச்சியை பத்திரமா அனுப்புறதா இருந்தா கூட்டிட்டுப் போங்க என்ற நிபந்தனையோடு அனுப்பினார்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் டாஸ்மாக் பாரில் ஒதுங்கினோம். முதலில் ஒரு அரைபாட்டில் காலியானது. அப்புறம் ஒரு குவார்ட்டர், இன்னொரு குவார்ட்டர்.

நான் அம்மாவின் ஆசியாக அருவியில் குளிப்பது முதல் வேலை. இரண்டாவது பத்திரமாக நாளைக்குள் சென்னை சேர வேண்டியது என்று குடிக்கும் போதே இருவரிடமும் கறராகச் சொல்லிவிட்டேன்.

குற்றாலத்தின் சாரல் விழும் 5வது கிலோமீட்டர் வந்துவிட்டு, குளிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பதற்றம் என்னிடம் தொற்றியிருந்தது.

அம்மாவின் மறைவிற்குப் பின் எனக்கு குற்றால அருவிகளே அம்மாவாக என்னை வர்ஷித்துக் கொண்டதாகப் பட்டது.

இந்த வருட சீசனில் ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது அருவிக் குளியல் (முதல் குளியல், குடியல் தனிட்ராக்)

தீராத காமம் போல் இப்போது அருவிக் குளியல் என்னை ஈர்த்திருப்பது எனக்கே வியப்பாகத் தானிருக்கிறது.

பாரை விட்டு வெளியேவந்தோம் பஸ்ஸில் போகலாம் என்றார் அண்ணாச்சி. அதற்குள் முரளி ஆட்டோ பேசி விட, அடுத்த 1வது நிமிடம் குற்றாலம் பேரறுவி!

(மெயின் பால்ஸ்)

முரளியும் நானும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டோம். அண்ணாச்சி எங்களது உடைமைகளை தலைக்கு வைத்து படுத்துவிட்டார். முரளி எண்ணெய் ஊறுவதற்காக சிகரெட் பிடித்தபடி அமர்ந்தார்.

நான் துண்டு அணிந்து அருவிக்குள் புகுந்தேன். சற்றுநேரம் பேரறுவியில் உட்கார்ந்தேன். சந்தோஷம், இழப்பு, பரவசம், கண்ணீர் என்று மாறிமாறி மனசுள் பரவிய உணர்வலைகளில் அலைக்கழிக்கப்பட்டேன்.

சட்டென வெளியேறி விலகி அருவியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் அருவிக்குள் புகுந்தேன். சற்று நேரத்திற்குப் பின் முரளியை அழைத்து வந்து மீண்டும் அருவிக்கு என்னை கொடுத்தேன்.

இருபது நிமிடத்திற்கு மேல் இருவரும் அருவியிடம் ஒழிந்தோம்.

உடல் வெடவெடக்க வெளியேறி சிஞ்சித்தும் போதையில்லாமல் பசி கிளறியது.

குற்றாலநாதர் கோவிலருகே சுடச்சுட மிளகாய் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தவரிடம் முதலில் இரண்டு, மீண்டும் ஒன்று அவருக்கு ஒன்று, இன்னும் இரண்டென்று எட்டு பஜ்ஜிகளை முழுங்கினோம்.

முரளி உடைமாற்றினார். தூங்கி எழுந்த அண்ணாச்சியை துண்டை கட்டச் சொல்லி அருவிக்கு கூட்டிப்போனேன்.

இருவரும் கை கோர்த்து பேரறுவி பெருந்தருவாயில் ஆசிர்வாதிக்கப்பட்டவர்களாய் நின்றோம்.

பேரறுவியின் இரைச்சலையும் மீறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசைக் குறிப்பில்லாத ஒலிகளை வாய் விட்டு எழுப்பிய சேர்ந்திசை பரவசப்படுத்தியது.

இருவரும் வெளியேறினோம். உடைமாற்றினோம். முரளி தன் செல்போனில் இருவரையும் அருவியின் பின்னணியில் நிற்கவைத்து படமெடுத்தார். சுமாராகத்தான் வரும் என்றார். இப்போது பார்க்கையில் நன்றாக வந்திருப்பதாகவே படுகிறது.

Thursday, September 16, 2010

அம்மாவின் திதியும் அண்ணாச்சியோடு குற்றாலக் குளியலும்

கஷ்டமாகத்தானிருக்கிறது அம்மா என்னை விட்டுப்போய் ஒருவருடம் ஆகிவிட்டது.

13ஆம் தேதி கோவில்பட்டியில் அம்மா இறந்த திதி வருவதால் வரவும் என்று அண்ணன் ஏற்கனவே சொல்லியிருந்ததையொட்டி ஞாயிறு காலை புறப்பட்டேன்.

அச்சு மற்றும் பதிப்புரைத் துறை நண்பன் வாசு வந்து, அவனது டூவீலரில் அழைத்துப் போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட சம்மதித்திருந்தான்.

12 மணியளவில் வீட்டிற்கு வந்த வாசு, அவனது வீடு மற்றும் அச்சகத்தை எனக்கு சுற்றிக்காட்டிவிட்டு அண்ணாச்சியின் (விக்ரமாதித்யன்) கட்டுரை தொகுப்புகளடங்கிய பேராறு என்ற புத்தாகத்தைக் கொடுத்தான்.

ஏற்கனவே தமிழ் வீடு ரிச்சர்ட் ஆனந்த் அண்ணாச்சியிடம் திருப்பி ஒப்படைக்கச் சொன்ன கவிதைரசனை பாதி இருட்டு பாதி வெளிச்சம், கவி மூலம் புத்தகங்களும் பையில் வைத்திருந்தேன்.

எதாவது சாப்டறீங்களா? என்று கேட்டு சாப்டலாம் என்று நான் தலையசைத்த பத்தாவது வினாடியில் அவனது வாகனம் நின்ற இடம் எம்.எம்.டி.ஏ. டாஸ்மாக் பார் வாசல்.

இருவரும் தனி மேஜையை ஆக்ரமித்தோம். அரை பாட்டீல் மேன்ஷன் ஹவுஸ் பிராந்தியும் ஒரு பீருக்கும் அவனுக்கும் எனக்குமான சிகரெட்டும் டம்ளர்கள் மற்றும் வாட்டர் பாட்டிலுக்கும் வாசு ஆர்டர் செய்தான்.

அவனுக்கு பீர், எனக்கு பிராந்தி இரண்டாவது மூன்றாவது ரவுண்டில் பீரும் பிராந்தியும் கலக்கப்பட்டது. மேலும் ஒரு பீர் பாட்டில் வரவழைக்கப்பட்டது.

பேச்சு ஆதிசங்கரா படத்திற்காக எனது பயணம் குறித்து வந்தது. இந்தியாவில் குளிக்காத நதியில்லை, பத்ரிநாத், கேதர்நாத் பயணமென்று விரிந்தது.

திடீரென வாசு மலைகளை பற்றி எழுதுங்கள் என்றான். நேற்று காலை டி.டி.பி.க்கு கொடுத்த நாவலின் பெயர் இமயத்தை நோக்கி என்றேன்.

மலையை எழுதத் தொடங்குங்கள் மாற்றம் வரும் என்றவன் தொடர்ந்து கவிதை நடையில்

கட்டிலிலே உயிர் நீத்த அன்னை

தென்கோடி பிறந்த பூமி நோக்கி

உன்னை அழைக்கின்றாள்

பூமி முகம் பார்த்து வா

புத்தொளி பிறக்கும்

என்று கூறி முடித்தான்.

ஏய்.. வாசு இப்ப சொன்னதை திரும்பச் சொல் என்றேன்.

அவனுக்கோ அவன் சொன்னதை திரும்பச் சொல்ல தெரியவில்லை. தெரியல என்றான். ஆனா நீங்க ஊருக்கு போய்ட்டு வாங்க.. நல்லது நடக்கும் போகாம இருந்திராதீங்க என்றவன் மேலும் ஒரு பீருக்கும், குவார்ட்டருக்கும் ஆர்டர் செய்தான்.

இதை கிளாஸில் ஊற்றும் போது நிறையத் தடங்கல் வரும் போகாம இருந்திராதீங்க என்று எச்சரித்தான். அடுத்த ஸ்டாப் தான் கோயம்பேடு இப்படிச் சொல்கிறானே என்று எண்ணி நீ வண்டியை கிளப்புனா 2 நிமிடம் என்றேன்.

ம்ஹீம். இனி வீட்டுக்கு தவிர எங்கேயும் வண்டிலே போகமாட்டேன்.

ஆனா நீ போகாம இருந்திராதீங்க

என்று எச்சரித்து விடை பெற்றான் நான் ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடை அடைந்தேன். எனது பாஸை காட்டி சீட் பிடித்தேன். மணி 4.

கையிலிருந்த செல்போனுக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் செய்தேன். பேருந்து புறப்பட்டது. விக்ரமாதித்யனுக்கு போன் போட்டு பேசி முடித்தேன்.

50 ரூபாய் அவுட்.

அதிகாலை 3.40க்கு கோவில்பட்டி நியூபஸ்ஸ்டாண்டில் பேருந்திலிருந்து இறங்கினேன்.

அந்த நேரத்திலும் கதிரேசன் மலையில் விளக்குகள் அணிவகுத்து எரிந்து கொண்டிருந்தன.

(70) எனது கல்லூரிக் காலம் வரை ஆறுமணிக்கு மேல் அந்தப் பகுதிக்குச் செல்ல ஆட்கள் அஞ்சுவார்கள்.

பிரேமியோடு ஒரு மாலையில் சூரியன் அஸ்தமனப் பின்னணியில் பேசிக் கொண்டிருந்தது. நினைவுக்கு வந்தது.

4.30 மணிக்கெல்லாம் ஆட்டோ மூலம் வீடடைந்தேன். தூங்கி எழுந்து குளித்து தயாரானேன். (வேப்பங்குச்சியில் பல் துலக்கியது சந்தோஷமாக இருந்தது.) வீட்டில் எல்லோருமே பேஸ்ட், பிரஷ் தான்.

அய்யர் தனது இருசகாக்கள் மற்றும் காய்கறி, தான்யங்கள், பூ, பழம், ஹோம குச்சிகளோடு வந்து சேர்ந்தார்.

அண்ணனையும் என்னையும் விளக்கு முன் அமரவைத்து தலைவாழை இலைபோட்டு எல்லாம் படைத்தார், ஐயர். பித்ருக்களுக்கான பிண்டத்திற்கு சமர்ப்பணம் முடிந்ததும், அது ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்து எள்ளும், நீரும் விடப்பட்டது.

அந்த பாத்திரத்தை துண்டு போர்த்தி மூடி நான் ராமசாமிதாஸ் பூங்கா பின்புறமுள்ள கிணற்றுக்கு கொண்டு சென்றேன். மதியம் 12 மணி வெயிலில் நீண்ட நாளைக்கு பின் காலில் செருப்பில்லாமல் தண்டவாளம் கடந்து நடந்தேன். கூடவே, பேரன் ஆதியும் தொடர்ந்து வந்தான்.

இதற்குள் அண்ணன் போதையில் தூங்கிப் போனான். அக்கா, தங்கை என்று ஆளாளுக்கு வைதனர்.

நான் வெளியேறி கடைக்கு போய் குவார்ட்டர் வாங்கி மற்றொரு தங்கை வீட்டில் வைத்து நிதானமாக குடித்து விட்டு வீடு திரும்பினேன். (அது வேறு புகாராக மறு நாளாக எழுந்தது தனி)

(தொடரும்)

Friday, September 10, 2010

காணாமல் போவது...

இன் டூ தி வைல்டு என்ற ஆங்கிலப்படம். நேற்றும் நேற்று முன் தினமும் இயக்குநர் ராஜேஸ்வரோடு பார்க்க வாய்த்தது. படம் என்னை உலுக்கிவிட்டது உலுக்கி இன் டூ தி வைல்டு என்பதை காட்டாறு அல்லது வனப்ரஸ்தம் என்று கொள்ளலாம்.


ரோச் என்ற இளைஞன் படித்து நல்லமார்க்குகளோடு பட்டம் பெறுகிறான். பட்டமளிப்பு விழாவிற்கு பின் விருந்தில் அவனது தந்தை அவனுக்கு புதிய மாடல் கார் ஒன்றை பரிசளிக்க முன்வருகிறார். அவன் அதை ஏற்க மறுக்கிறான். உயர் கல்விக்காக 24 ஆயிரம் டாலர் பணத்தை தந்து அனுப்புகிறார்.

அவனோ இதை எல்லாம் புறக்கணித்து தன்னைத் தேடிப் போவதாகச் சொல்லி அலஸ்கா புறப்படுகிறான் (நமது இமயமலை போன்ற பணிமலைப் பிரதேசம்) முதல்காரியமாக கையிலுள்ள சான்றிதழ்கள் டாலர்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு தீயிட்டு கொளுத்துகிறான்.

போகும் வழியில் ஒரு தம்பதிகளை சந்திக்கிறான். அவர்களோடு சில நாட்களை கழித்து விட்டு பயணத்தை தொடர்கிறான்.

வேறொரு பகுதியில் ஒரு இளம் பாடகியைச் சந்திக்கிறான். அவன் இவள் மீது காதல் கொள்கிறாள். இவனோ அவனை விலக்கி, பயணத்தை தொடர்கிறான் திருட்டுத்தனமாக ரயில் பயணம் மேற்கொண்டு பிடிபட்டு, கீழிறங்கி விடப்படுகிறான்.

வழியில் வேறொரு முதியவர் பிரிந்து போன தனது மகன், மனைவிக்காக காத்திருக்கிறார் அவரோடு சில நாட்கள் கழிக்கிறான்.

அலாஸ்கா பற்றி மேப், அங்கு கிடைக்கும் மிருகங்களை வேட்டை ஆடுவது எப்படி? எவ்வளவு நேரத்தில் அவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். அங்கு இயற்கையாக கிடைக்கும் கிழங்கு, கனிகளில் எவற்றை உண்ணலாம் என்ற புத்தகம், துப்பாக்கி குண்டுகளோடு அலாஸ்காவுக்கு ஒரு தோள் சுமையோடு ட்ரக் ஒன்றில் போய் சேருவான். (படம் இங்குதான் துவங்குகிறது. மற்றதெல்லாம் இடையிடையே தான் அவன் எழுதுவது காட்சிகளாக இடத்திற்கு வருகிறது) அடையாளமாக பனிப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் தன் தொப்பியை சுற்றி விட்டு பனிமலை நோக்கி நடக்கிறான்.

நதியொன்றை நடந்து கடந்து பனிமலையை அடைகிறான். எங்கும் பனிமலை. நடக்க, நடக்க வேறு எதுவுமே தென்படவில்லை. பரவசத்தில், யாருமில்லை சிகரெட் இல்லை, வாகனச் சத்தமில்லை என்று வாய்விட்டு கத்துகிறான்.

ஒரு பள்ளத்தாக்கில் எப்போதோ விழுந்த மினிவேன் ஒன்று பனிமூடிக்கிடப்பது தெரிய அதையடைந்து பெரும் அரும்பாடுபட்டு அதை தனது இருப்பிடமாக மாற்றிச் கொள்கிறான்.

தனது பெரை அலக்ஸ்ட்ரைம் மரக்கட்டையில் பொறித்து விட்டு தனது அனுபவங்களை எழுதுகிறான். மிளா ஒன்றை சுட்டு சாப்பிடுகிறான். பனி உருகி வழிய சைலன்ரை மரத்தில் கட்டிவிட்டு ஷவர் போல குளிக்கிறான்.

இப்படியே எழுதுவதும், வேட்டையாடி சாப்பிடுவதுமாக சில மாதங்கள் கழிகிறது. எதையோ உண்ணக் கூடாததை உண்டதால் வயிறு கோளாறாகி படுத்த படுக்கையாகி மெலிந்து கிடக்கிறான்.

திரும்ப போவதற்காக நெடுந்தூரம் நடந்து திரும்பி தன் தொப்பியை வைத்த நதியருகே வந்து சேர்கிறான். அவன் நிதியிலறங்க வேகங் கொண்டு சுழல் இழுக்கிறது உடல் பலவீனமாக இருப்பதால் நீந்த முடியாமல் திரும்ப பஸ்சுக்கே திரும்புகிறான்.

உடல் முழுக்க மூடிப்படுக்கிறான். உயிர் கொஞ்சம் கொஞ்சமாகபிரிய, காரின் ஒட்டை வழியாக உயரே பார்க்க ஆகாயம் விரிகிறது.

அப்போது கடைசி வரிகள் எழுதிவிட்டு கண்ணில் நீர்வழிய கண் மூடுகிறான்.

அவன் எழுதி வைத்த அட்டையில் பகிர்ந்து கொள்வதே சந்தோஷம் என்று படம் முடிகிறது. பகிர்ந்து கொண்டேன் சந்தோஷம்.

Thursday, September 9, 2010

மைதானப் பந்து

கிழக்கு நோக்கி


உதைக்கிறான் ஒருவன்

தடுத்து

மேற்கு நோக்கி

உதைக்கிறான் இன்னொருவன்



தெற்கு வடக்கென்று

திக்கிற்கொரு ஆளாக நின்று

பலங்கொண்டு உதைக்கிறார்கள்



உதைப்பவர்க்கெல்லாம்

ஒரு திசை இலக்குண்டு



எட்டுத் திக்கும்

அலைபாயும் பந்துக்கு

எந்த திக்கு

சொந்த திக்கு

வித்யாஷங்கர்

Saturday, September 4, 2010

பிப்லி லைவ்வும் போப்ஸ் டாய்லெட்டும்

பிப்லி லைவ் அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம். இந்திய விவசாயியின் மனசாட்சியாக இருந்து இந்தப்படத்தை தயாரித்துள்ள

அமீர்கானுக்கு முதலில் சல்யூட்!

படம் பார்க்கும் போது மீடியாக்காரர்களின் முகத்தில் விவசாயி ஒருவர் காரித்துப்பிய எச்சில் தான் தெரிகிறது.

விவசாயத்தை ஆதரமாகக் கொண்ட பிப்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்.

அவர்கள் வாங்கிய கடனுக்காக நிலத்தை விற்று தரும்படி வங்கி கேட்கிறது.

உள்ளுர் பணக்காரரும் அரசியல் புள்ளியுமானவரிடம் இருவரும் போய் உதவி கேட்கிறார்கள்.

விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருகிறது. உங்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து விட்டு, பணத்தை வைத்து நிலத்தை தாய்பாற்றிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் ஆலோசிக்கிறார்கள் தம்பி தற்கொலை செய்து கொள்வதென்றும் அதில் வரும் பணத்தை வைத்து அண்ணன் குடும்பத்தையும் விவசாயத்தையும் பார்த்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். இதை இருவரும் ஒரு டீக்கடையில் வைத்து தெரிவிக்கவும் செய்கிறார்கள்.

இதைக் கேள்விப்படும் அந்தப் பகுதியில் அச்சகத்தில் பணியாற்றும் நிருபர் தனது பத்திரிகையில் இதை வெளியிடுகிறார்.

இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செய்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் தற்கொலை செய்து கொள்ளப்போகும் விவசாயி நாதா வை லைவ்வாக காட்ட முடிவு செய்து அப்லிங்க் வேனோடு கிராமத்திற்கு போகிறது.

நாதாவின் பேட்டி டி.வி.யில் வந்ததும் முதலமைச்சர் கோபமாகி கலெக்டரிடம் பேசுகிறார்.

கலெக்டர் நாதாவின் சீட்டிற்கு போய் சாஸ்திரி திட்டம் என்று ஒரு அடிபம்பை தந்துவிட்டு செல்கிறார்.

வேறொரு சாதிக்கட்சி தலைவர் வந்து நாதவை சந்தித்து அவனை சாகவிடமாட்டோம் என்று சூளுரைக்க அதுவும் டி.வி.யில் வருகிறது.

மேலும் டென்ஷன் அதிகரிக்கிறது. இதற்குள் நாதாவின் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காமிராக்கள், வீடியோ காமிராக்கள் ஆப்லிங்க் வேன்கள், போலீஸ் பாதுகாப்பு என்று அந்த ஊரை அமளிப்படுகிறது.

தொடர்ந்து நாதாவைப்பற்றி ஊராரின் பேட்டிகள் நாதா சொன்னபடி செத்துருவான் என்று உறுதி செய்கிறது.

முதல்வருக்கு எதிராக சதி செய்யும் ளஅதே கட்சியைச் சேர்ந்த நாதாவை சந்தித்து 2 நாளில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால் சொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வேறு மாதிரி டி.வி.க்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு போகிறார்.

இரவும் பகலும் டி.வி.க்காரர்கள் நாதாவை கண்காணித்தபடி இருக்கிறார்கள்.

அவனது தற்கொலை அப்படியே லைவ்வாக காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.

நாதாவை குடும்பத்தோடு, ஆட்டுக்குட்டியோடு என்று விதம் விதமாக ஒவ்வொரு டி.வி.யும் போட்டி போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சரே நாதாவின் கிராமத்திற்கு வந்து ஒரு லட்ச ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து சாதித் தலைவரோடு வந்து செல்கிறார்.

கிராமம் திருவிழா கோலம் கொள்கிறது.

எப்போதும் கார், ஜீப் பறந்து கொண்டேயிருக்கிறது.

டி.வி.காம்பயர்கள் முகத்துக்கு மேக்கப் போட்டு லிப்ஸ்டிக் பூசி தினமும் காலையில் நாதாவை குறித்து செய்திகளை லைவ்வாக தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருநாள் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க நாதா ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுங்க அதையும் ஒருவர் டவரிலிருந்து காமிராவில் சுருட்டிவிடுகிறார்.

அதற்குப்பிறகு நாதாவை காணவில்லை.

நாதா மலம் கழித்ததைக் கூட தொலைக்காட்சிகள் காட்டி அவன் எங்கே என்று கேள்வி எழுப்புகின்றன.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் நாதா சிலரால் கடத்து வைக்கப்பட்டிருப்பது உள்ளுர் நிருபருக்கு தெரியவருகிறது.

அவர் தொலைக்காட்சி நிருபருக்கு போன் செய்து தெரிவிக்க அந்த வீடு நள்ளிரவில் தொலைக்காட்சி நிருபர்களால் முற்றுகையிடப்படுகிறது.

அப்போது ஏதோ வெடிக்க தீ விபத்தில் நாதா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

நாதா பேரில் ஏழை விவசாயிகளுக்கு உதவி கார்டு திட்டத்தை முதல்வர் அறிவிக்கிறார்.

நாதாவின் அண்ணன் பணத்திற்காக அலைய விபத்தில் இறந்தவருக்கு பணம் தரமுடியாது தற்கொலைக்குத் தான் 1 லட்சம் என்று அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.

அடுத்தடுத்து வரிசையாக மீடியா கார்கள் ஏமாற்றத்தோடு ஊரைவிட்டு கிளம்புகின்றன.

நகரின் உயர்ந்த கட்டிடங்கள் நாற்கரச் சாலைப் பணி நடைபெறுகிறது. விவசாயத்தை கைவிட்ட பலர் மண்வெட்டிக்கொண்டுஉள்ளனர். அவர்களுக்கிடையே நாதாவும் இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகர்புறத்தில் வேலைக்கு குடியிருப்பதாக எழுத்தில் காட்டப்படுகிறது.

நையாண்டியாக மீடியா குறித்து கதை பேசினாலும் போகிற போக்கில் இப்போதுள்ள அரசியலமைப்பை, அதிகாரவர்க்கத்தை மீடியாக்களின் சொரணையற்ற தன்மையை விவசாயிகளின் நலிவை சுட்டிக் காட்டத்தவறவில்லை.

இப்படியொரு படத்தை முதல்வர் குடும்பத்து வாரிசுகள் காலநிதி, உதயநிதி, தயாநிதி யாராவது தயாரிக்க முன்வருவார்களா? மாட்டார்கள் (இது மல்லாக்கப்படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து கொண்டு எச்சில் துப்பும் விஷயமாகிவிடும்)

அதேசமயம் பிரேசில் படமான போப்ஸ் டாய்லெட் இதைபார்க்கும் போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இன்னமும் கிராமமென்றால் பச்சைதாவணி மாமன் மகனும், அருவாளோட திரியும் இளந்தாரியும் அவிங்கா வீம்பு பண்றாங்கே பெருசு சொல்லிருச் என்று வசனங்களால் கிராமத்தை காட்டாமல்

விளைநிலங்கள் அடுக்குமாடி வீடுகளாகவும், கல்லூரி கட்டிடங்களாகவும் மாறிவருவதை புதிய தலைமுறை சினிமாக்காரர்கள் திரைக்கு கொண்டு வர வேண்டும்.

கவிஞர் தேவதச்சன் சொன்னது போல கிராமங்கள் மேலும் மேலும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டிருக்க நகரங்கள் டானிக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதை என் இளைய தலைமுறை எடுத்துச் சொல்ல பிளிப்லைவ் போப்ஸ் டாய்லெட் போன்ற படங்களை பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன்.

போப்பின் வருகையையொட்டி தொலைக்காட்சிகளும், மற்ற மீடியாக்களும் அந்த ஊரில் உள்ளவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டுவரும்.

இந்தநிலையில் பக்கத்து நகரிலிருந்து சிறுசிறுபொருட்களை கடத்து வரும் நண்பர்கள் போப் வருகையை வைத்து சம்பாதிக்க திட்டமிடுவார்கள்.

மீடியாக்கள் லட்சம்பேர் கூடக்கூடும் என்று திரும்பத்திரும்ப சொல்லும்.

இதை நம்பி ஒருவர் ஆயிரக்கணக்கான விதவிதமான கேக்குகள் தயாரிப்பிலும் இன்னொருவர் பீட்சா தயாரிப்பிலும் ஈடுபடுவார்கள்.

கதாநாயகன் வேறுமாதிரி யோசிப்பான். இவ்வளவு பேர் கூடுமிடத்தில் ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்தால் இதற்காக அவன் படும்பாடுதான் கதை. ரேடியோ ஜாக்கியாக மாற விரும்பும் மகளின் டிரான்சிஸ்டருக்கு பேட்டரி கூட வாங்கித்தராமல் பைசா பைசாவாக சேர்த்து கட்டண கழிப்பிடத்தை கட்டிவிடுவான். போப் வருகையன்று அவன் கழிப்பிட கோப்பையை ஏந்திவரும் போது போப் சிலநிமிடங்கள் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுவிடுவார்.

அவன் பைத்தியம் பிடித்தவன்போல் டி.வி.மீது பீர் பாட்டிலை எறிவான் இப்படி முடியும் கதை.

இதில் மகளின் ஆசை, இவனது கனவு, மனைவியின் பாடுகள் எல்லாமே நிராசையாவது பெருத்த சோகம்.

பிப்ளி லைவ் படத்தில் விவசாய குடும்பத்தின் உறவு நெருக்கங்கள் நிலத்தின் மீதான ஈடுபாடு எவையும் கண்டுகொள்ளப்படாதது வருத்தத்திற்குரியதே.

ஆனாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து கிணறு வெட்டும் ஒ

ருவன் (பசி பட்டினியோடு) தண்ணீரை பார்க்காமலே மடிந்து போவது தனிக்கதை. (கி.ரா.வின் கிணறு கதைதான் நினைவுக்குவந்தது)

இதில் கதாநாயகனோடு அவளதுகுடும்பத்தாரும் அவனது ஆசையோடு பயணித்து நிராசையில் தத்தளிப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. திரைக்கதையில் பிப்ளி லைவ்வில் அது மிஸ்ஸிங்.

இருப்பினும் சமகால பிரச்சணையை விமர்சனக் கண்ணோட்டத்தோடு முன் வைத்த அமீர்கானுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

வித்யாஷங்கர்.

Thursday, September 2, 2010

காலடிச்சுவடில் கவிதை

சுலபமாக இருந்தது

சோவியத் கலாச்சார
அரங்கின் இருளில்
அருகருகேயமர்ந்து
ரோஷமான் பார்த்த போது

சாப்ளின் படவிழாவில்
பாப்கார்ன் கொறித்தபடி
சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டது

குளிர் இரவில்
கடற்கரையில்
துப்பட்டா தலை போர்த்திய
நிலவாய்
நீ கண்ணீர் உகுத்தது

சீசா ஆடிய
சிறுவர் சிறுமியாய்
மாறிய மகிழ்ச்சி
எல்லாமே சுலபமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது

நீ உயர்ந்த இடத்தை
அடையும் வரை

இப்போதோ
எத்தனை திரைகள்
எத்தனை தடைகள்
நீயொருநாள்
இறங்கி வரும் வரை
காத்திருப்பேன்
கடற்கரை
காலடிச் சுவடுகளின்
கவிதையைக் கேட்டபடி
வித்யாஷங்கர்