Wednesday, January 12, 2011

ஈரம் காய்தலுக்கான அவசியம் ஒரு புத்தக மதிப்புரை

“கவிதை புத்தகங்கள் தான் சரியா போறதில்லை” என்று தொலைக்காட்சியொன்றில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் வைத்திருக்கும் பெண்ணொருவர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

இன்னொருபுறம் ஏகப்பட்ட புத்தக வெளியீட்டு விழாக்கள் ஏதோ ஜனவரிக்குப்பின் புத்தகமே எழுதமாட்டார்கள் என்பது போல ஒரே களேபரம்.

தெரிந்த பதிப்பக நண்பர்கள் கூட எழுதிக் கேட்கும் போதே “கவிதை தொகுப்பு வேண்டாமே சிறுகதை வேண்டாமே, நாவல் அல்லது கட்டுரைகள் தாருங்கள்” என்றே கேட்கிறார்கள்.

கவிதை புத்தகங்களை அரசு நூலகத்திற்கு எடுப்பதில்லை என்பது பதிப்பாளர்ளகளின் ஆதங்கம்.

பிரபல வார இதழ்களில் சிறுகதை என்பதன் சகாப்தமே முடிந்து ஒரு பக்க கதையாக சுருங்கிவிட்டது. அநேகமாக எல்லா பத்திரிகைகளிலும் தொடர்கதை நிறுத்தப்பட்டுவிட்டது.

பத்தி எழுத்தாளர்கள் காட்டில் தான் மழை! பத்திரிகைகள் தங்களது தேவைக்காக டிரைவரின் அனுபவங்கள், சிட்டி ஆட்டோ ஓட்டுனர் அனுபவங்கள் என்று புதிது புதிதாக ஆட்களை தேடித் தேடி உற்பத்தி செய்கிறார்கள்.

பத்திரிகையின் (அதிகபட்சம்) 4 பக்கங்களுக்குள் கவிதைக்கும் இடமளிக்கப்படுகிறது. (ஏதோ போய்ட்டு போகுது என்று)

பதிவர்கள் “கவிதை வெளியீடா” என்று தலைதெறிக்க ஒடி ஒளிகிறார்கள்.

இப்படியான கவிதைச் சூழலில் தான் செல்வராஜ் ஜெகதீசனின் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் கவிதை தொகுப்பு மூத்தகவி வண்ணதாசன் முன்னுரையோடு அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது.

இதையும்

இன்னும் சற்று மேம்பட்டதாக

இன்னும் சிறிது சுரத்துள்ளதாக

இன்னும் கொஞ்சம் உவப்பானதாக

இன்னும் எப்படியெல்லாமோ

இருந்திருக்கலாம் என்கிறீர்கள்

இந்த சிறு வாழ்வில்

இந்தளவாவது இயன்றதே என்கிறேன்

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்

ஏனைய பிறயாவற்றையும் போல.

புத்தகத்தை புரட்டியதும் கண்ணில்பட்ட கவிதை இது.

இந்த கவிதையை படித்தபின் விமர்சனம் எழுதுவதில் சிறு தயக்கமே எழுந்தது.

இருப்பினும் சமீப வருடங்களில் துடியாக கவிதைத்தளத்தில் இயங்கி வருபவரான செல்வராஜ் ஜெகதீசனை குறித்து எழுத வேண்டியிருக்கிறது.

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்

இன்னொரு முகத்தின்

சோகத்தை இம்மியாவது

இடம் பெயர்க்க முடிந்ததென்ற

நிம்மதி எனக்கு

அபுதாபியில் பணியாற்றும் எத்தனையோ பேர்களில் கவிதையை தனது தோள் சாய்க்கும் துணையாக கொண்டு செயல்படுபவர் என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது அவரது பகிர்தலுக்கான பதற்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

கவிதைபத்து எழுதியிருப்பதன் மூலம் அவருக்கு கவிதை குறித்து கோட்பாடு இருக்கிறது.

ஏதாவது தொக்கி

நிற்றல் நலம்

என்றெல்லாம் சொல்கிறார்.

மீட்டாத வீணைகவிதையை அவரது கோட்பாட்டின்படி பார்ப்போம்.

இங்கிருந்து போயிருந்த

என்னைப் போலவே

அங்கிருந்து

அவர்கள் வந்திருந்தார்கள்



அவரவர் இடங்களைக் குறித்தே

அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்

அயர்ந்து திரும்பும் வரை



தன் பொருட்டும்

எழும் விரல்களுக்காக

மீட்டாத வீணையென

காத்திருக்கும்

மீளாத்துயரில் அந்த இடம்

மீட்டாத வீணையென்ற மிகவும் நைந்துபோன உவமையால் கவிதை எழும்பாமல் சமதளத்தோடு நின்று விடுகிறது. நட்பு கருதி இப்படியிருந்திருந்தால் என்று ஒரு மாதிரியை முன்வைக்கிறேன்.

ராஜ பாளையத்து

பெரியம்மையும்

ஏழாயிரம் பண்ணை

சித்தியும்



திருச்செந்தூர் போனார்கள்

கடற்கரையிலமர்ந்து

கடலை கொறித்தபடி

தத்தம்

மருமக்கள்

கொடுமைகளை

மெய்மறந்து பேசினர்



ஆர்ப்பரித்து வந்த

அலைகள்

சோர்ந்து போய் திரும்பின

கடலுக்குள்

சென்ற இடத்தை கவனிக்காத துயரை என்னால் இப்படித்தான் வெளிப்படுத்த முடியும்.

டீ குடிக்கச் செல்வதைக் கூட பகிர்ந்து கொள்ள துடிக்கிற மனசு அதை கவிதையாக நம்பவைக்கிறது. ஆனால் வாசிப்பவனிடத்தில் அது கவிதானுபவத்தை ஏற்படுத்துமா என்று யோசியுங்கள் தன்னை, தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் துடிக்கிற பதட்டம் தணிந்து செல்வராஜ் ஜெகதீசன் தன் ஞாபகங்களை அனுபவத் திரட்சியாக்கிச் சொல்லும் போது மிக நல்ல கவிதைகள் கிடைக்கக்கூடும். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகளில் அதற்கான நுட்பம் இவர் கைவரப் பெற்றிருப்பது, ஆங்காங்கே தென்படுகிறது.

வண்ணதாசன் முன்னுரையில் சொல்வது போல இந்தக் கவிதைகள்.

பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் போசுகிற அன்றாடத்தின் தொனியுடன் (கவனிக்க வேண்டியது) அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களை அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது. ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது.

இதையே நானும் தங்களுக்கு வற்புறுத்தலாக முன்வைக்கிறேன்.

வித்யாஷங்கர்

5 comments:

  1. கவனத்தில் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. //
    இதையே நானும் தங்களுக்கு வற்புறுத்தலாக முன்வைக்கிறேன்
    //
    கண்டிப்பாக!

    நன்றி,

    ReplyDelete
  3. அறியாத கவிஞர். அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete