Saturday, February 26, 2011

ஸ்ரீ அன்னை





உனது ஒவ்வொரு சிறு அசைவிலும்
உயிர்க்கிறேன்

இறுக மூடிய இதழ்களுக்குள்
வெளிவரத் துடிக்கும்
வார்த்தைகள் காதுகளில் ரீங்கரிக்கிறது

சிறு குழந்தை போல
நடந்து கொள்ளும் பாவணைகளில்
குதூகளக்கிறேன்

குழந்தைகளோடு குழந்தையாய்
இருக்கும் உன்னை
பெரியவளாக்கிப் பார்க்கும்
பிரயத்தனத்தில்
தோற்றுத் தோற்று
விழுந்து தவழ்கிறேன்
என்னையும் குழந்தையாக்கும்
மாயமறிந்த உன்முன்

.....

எதிர்படாமலிருந்திருக்கலாம்
எதிர்ப்பட்டுவிட்டோம்
பார்க்காமலே கழிந்திருக்கலாம்
பார்த்துவிட்டோம்

பேசாமலே இருந்திருக்கலாம்
பேசிவிட்டோம்

இனி பிரியாமலேயிருக்க
வழி ஏதுமில்லையாதலால்

பிரிவோம் என்ற அறிதலோடு
பயணிப்போம் முடியும் வரை

......

உன் ஞாபக அடுக்குகளை
கலைக்கிறேன்
உன் நெகிழ்ந்த கணங்களை
நினைவூட்டுகிறேன்
என்னை உன்னில் பதிக்கஅல்ல
உன்னை உனக்குச் சொல்ல

.....

எப்போதும் பாடலை முணுமுணுக்கும்
இதழ் அவளுக்கு
கைதட்டி ரசிக்க
யாருமற்ற போதிலும்
எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கிறாள்
அவள் தனக்கான பாடலை
தனக்குள்

......

நீ உனக்கே செய்து கொள்ளாத
நன்மையை உன்னால்
பிறருக்குச் செய்ய முடியாது


No comments:

Post a Comment