Saturday, April 14, 2012

kavithai

நகம் கடித்தல்
கால் ஆட்டுதல்
தலை சொரிதல்
பல்லிடுக்கை துலாவுதல்
இப்படி யார் யாரோ
எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்
எதையாவதுசெய்யாமல்
எவராலும் இருக்க முடிவதில்லை
சும்மா இருக்கும்
சுகமறிந்தவர்
என்ன செய்வார்
சும்மா இருப்பார்
------------வித்யா ஷங்கர்

Monday, January 23, 2012

KAVITHIGAL

வீடோ நிலமோ
விட்டுப் போயிருந்தால்
பங்கு பாகம் பிரிப்பதில்
சண்டையிருக்கும்


கடன் சமை
விட்டுப் போயிருந்தால்
தீர்ப்பதில்
சண்டையிருக்கும்


எதுவுமே
விட்டுப்போவதாக
முதாதையார் நினைவு
தை அமாவாசையில்
சடங்காக வந்து போகும்
இவனுக்கு

பாவம் அவர்கள்
இவனுந்தான்
வித்யாஷங்கர்



*துயரங்கள் சுமப்பவன்
வெகு துõரப் பயணம்
இளைப்பாறுதற்று


இலக்கை கொலைத்தவிட்டு
ஓட்டம்


யாரோ எதுவோ
துரத்துகிற அச்சம்

கானல்நீரில்
தாகம் தணிக்கும்
எத்தனம்


உப்புச் சாலையில்
கொப்பளிக்கும் கால்கள்

நதிகளையும்
பேரருவிகளையும் விழுங்கிய
பாலைப் பயணம்

ஒற்றைக் குயிலின்
சோக கீதம்

இன்னொரு உதயம்
இன்னோரு நாள்

இன்னொரு நாள்
இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
வித்யாஷங்கர்


*எனக்கு கிடைத்தது
இப்படி என்கிறான்


இருளிலிருந்தே
எடுத்தேன் என்கிறான்

வியர்வையில்
விளைத்த முத்து என்கிறான்

இருளில்
வியர்வையில்
வேரில் தேடியும்
கிடைக்காதவன்
சொல்கிறான்

இருந்தால்தானே கிடைக்க
இல்லவே இல்லை என்கிறாள்

வித்யாஷங்கர்

Thursday, January 19, 2012

நன்மைகோணங்கிக்கு போன் செய்தேன்
நகுலன் பேசினார் 
நகுலன் இருக்கிறாரா என்றேன் 
இல்லை என்றார் 

நெல்லையில் 
கல்யாண்ஜியும் 
விக்ரமாதித்யனும் 
பேசி முடித்து 
விச்ராந்தியாய் அமர்ந்திருந்தனர் 

முருகபூபதியும் 
கோணங்கியும் 
குருமலை போய்
மூலிகை தேடி போயிருப்பதாகவும் 
தேவதச்சன்  சொன்னார் 
கூடவே அந்த மூலிகை கிடைப்பது 
அவ்வளவு   எளிதில்லை 
மௌனி அதை உண்டதாகவும் 
தெரிவித்தார் 

எங்களது  பேச்சை 
ஜன்னல் வழியே 
சமயவேல்  பார்த்து கொண்டிருப்பதாக 
கலாப்ரியா சொல்லிவிட்டு 
வித்யாஷங்கர்  என்று அழைத்திருக்கிறார் 
என் காதில் விழாமல் போயிற்று 
அருவி  இரைச்சலில்....
===========வித்யாஷங்கர் 

Monday, May 23, 2011

இப்போ து இவன்



பேரலைகளின் நடுவே
விலாங்குகளை வேட்டையாடியவன்
கடற்கரை மணலில்
சிப்பிகளை பொறு க்கிகொண்டிருக்கிரா ன்
பேர் சொன்னாலே
அரங்கம் அதிரும்  இப்போது
கடைசி வரிசையிலிருந்து
கைதட்டவும்  பலகிகொண்டான்
 பிரமா ஸ்திரம்  எர்ந்ததொரு காலம்
ப்ருஹன்னளையாய்
இருப்பதொரு கோலம்
                  வித்யாஷங்கர்

Tuesday, March 29, 2011

நல்லது செய்யுங்கள்!


அரசியல், கட்சி வேறுபாடு, கொள்கை மாறுபாடு எல்லாவற்றையும் தாண்டி ஒரு சரியான, தகுதி வாய்ந்த, அப்பழுக்கற்ற, தனிநபர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிற, நாலு பேருக்கு நல்லது செய்வதை தினசரி கடமையாக கொண்டு இயங்கி வருபவர், கொளத்தூர் அதிமுக வேட்பாளர் சைதை சா.துரைசாமி.
தேனி பகுதி கம்யூனிஸ்ட் முழு நேர ஊழியராக இருந்து தற்சமயம் விலகி யிருக்கிற தோழர் ஒருவரின் 24 வயதான மகனுக்கு தினமும் 600 ரூபாய்க்கு மருந்து, மாத்திரை தந்தால் ஒரு மாதத்தில் உயிரைக் காப்பாற்ற முடியும் நிலைமை.
என்னிடம் அந்த தோழர் வந்து முறை யிட்டார். முன்பின் நேரடியான அறிமுகம் இல்லாத சைதை சா.துரைசாமி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி மருத்துவ சான்றிதழ்களை இணைத்துக் கொடுக்கும் படி வழிசொல்லி தோழரை அனுப்பி வைத்தேன்.
மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என்னை அந்த தோழர் இருமுறை தேடி வந்து போனதாகச் சொன்னார்கள்.
உதவி கிடைக்கவில்லையோ, வேறு மாற்று என்ன என்று யோசித்தேன்.
அந்த தோழர் தன் மகனோடு வீட்டிற்கு வந்தார். ""மாமாதான்டா உனக்கு எல்லாம்'' என்று மகனிடம் சொல்லி கைகூப்பினார்.
என்ன என்னு விவரம் கேட்டேன்.
சைதையார் மருத்துவமனை பேரில் மொத்த மருத்துவச் செலவுக்கான தொகைக்கும் காசோலை கொடுத் திருந்ததை தோழர் காட்டினார்.
சிறிது நேரம் இருவரிடம் பேசி அனுப்பி விட்டு யோசித்தேன்.
கட்சி வேறுபாடு பார்க்காமல் அந்த தோழரின் மகனுக்கு சைதையார் உதவியது, பகைவனுக்கருள்வாய் அருள் நெஞ்சே என்ற வரிகளை நினைவூட்டியது.
தமிழகத்தில் முதுமையில் வாடும் பத்திரிகையாளர்கள் 20 பேருக்கு மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கி வருகிறார்.
பள்ளிக் கட்டணம் கட்ட முடியாதவர் களுக்கு கட்டண உதவி, பேருந்து கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கு உதவி, இப்படி எத்தனையோ உதவிகளை வெளித்தெரியாமல் செய்து வருகிறார்.
குடிப்பழக்கமுள்ள பத்திரிகையாளர்கள் ஒரு வருடம் குடியை நிறுத்தினால் தங்க மோதிரம் வழங்கி வருவது, அவரது மனித நேயத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தின் வருங்காலத்தை கணக்கி லெடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பதற் காக இலவச பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
எல்லோரையும் போல பத்திரிகை நடத்தியோ, சேனல் நடத்தியோ மேலும் பணம் சேர்க்காமல் சிறுகச் சிறுக சேர்த்ததை வாரி வழங்கிவரும் வாழும் கால வள்ளல் சைதையார்.
"நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை'
சைதையார் சட்டமன்றம் செல்வது  கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல.
தமிழக மக்களுக்கே நல்லது, நல்லது செய்யும், அந்த சந்தர்ப்பம் கொளத்தூர் வாக்காளர்களுக்கு இப்போது கிடைத் திருக்கிறது.
தவற விடாது செய்யுங்கள்.

Monday, March 14, 2011

கோணங்கி எனும் எழுத்துச்சிற்பி!



தமிழில்  ஒரு எழுத்துக்காரன் வருகை.
சிந்துபாத் தொடங்கி ஜெயமோகன் வரை
எத்தனையோ பேரின் படைப்புகளை படித்தாயிற்று
அவற்றில் பலவும் திரும்ப படிக்கும்படியாக
தூண்டவில்லை
திரும்பத் திரும்ப படிக்கவும், ஒவ்வொரு
முறையும் புதுவாசிப்பனுபவத்தை தருகிற
எழுத்தாக இருக்கிறது கோணங்கியின் எழுத்து

லா.சா.ரா. மௌளியின் வகையிலான
எழுத்து என்று கோணங்கியின் எழுத்தை
வரிசை கட்டிவிட முடியாது.
இதுதனி, தமிழுக்கு புதுசு. சுத்த சுயம்புவான
ஒற்றையடிப் பாதை.
கோணங்கியின் சலூன் நாற்காலியில்
சுழன்றபடி தொகுப்பிலுள்ள மீண்டும்
ஆண்டாளின் தெருக்களில்
மௌனத்தின் அடியில் நொறுங்கிய
சிருஷ்டிகளின் அதிர்வு. உளியின் பதிவுகள்
கரையான் தின்ற ஏடுகளில் உளியின்கோடு.
உளியின் தொகுதி ஒன்று கல்லில் பதுங்கிய பூதம்.
மூல உயிரென மைய இருள் நோக்கி தெறிந்த
வில்திறம் அதிரஅதி அலைஅலையாய் நூறாயிரம்
கல் மண்டபங்கள் தூண்கள் எல்லாம்
பேசாதிருந்த சிலை, கல்லின் பானவு விரக்தியின்
ஊற்று கல்லில் ஒளிரேகை இருளில் புகுந்து
அடிக்குரலில் குழுறும் புறா ஒன்றின் சோகமென
ஊமையான சிலை முகம். புறங்கள் தோறும்
அடைகிறது.

கர்ப்பகிரஹ இருளில் திரிகள் எரிகின்றன.
கிளியஞ்சட்டி தீபங்கள் கொண்டு வந்த மகளிர்
சூழ்ந்து வர அலபீடு கோபுரவாசல் சிற்பிகள் வாழும்
புஷ்பவனத் தெரு. கூட்டமாய் உறங்கும் மரங்கள்
கீழே ஊர்ந்து நகர்கிற நதி
கோவிலில் சிற்பங்களை பார்த்து நுட்பம் கண்டு
வியந்து, திகைத்து நெகிழ்கிறோம், அடடா இப்படி
இதழ் கடையோரம் குறுநகை, சுவாசிக்கிற நாசி,
சிரிக்கிற கண், குழைந்து நெகிழ்ந்த முன்கை,
இலையென படர்ந்த வயிறு, சற்றே சரிந்த முலை
உருட்டி எடுத்த நெகிழ்ச்சியோடு பிருஷ்டம்...
இவை எல்லாவற்றையும் கதைகளில் வரி வரியாய்
செதுக்கியிருக்கிறார் கோணங்கி
ஒற்றை வரிக்குள் ஒராயிரம் கதை, கவிதைகள்
பொதியக்கிடக்கிறது.
கல் மண்டபங்கள் தூண்கள் எல்லாம்
பேசாதிருந்த சிலை.
கல்லின் பாணஷ விரக்தியின் ஊற்று.
வரிவரியாய் செதுக்கிக்கட்டுகிற மாயக் கதைகளுக்குள்
வாசிப்பவன் வசியப்பட்டு உள் இழுத்துச்
செல்லப்படுகிறான்.

நாதஸ்வரஸ்வரங்களுள் லயிக்கிறவனின்
மோனம், வாசிப்பின் இறக்கம்.
நவீன இலக்கியத்தில் கோணங்கியின்
எழுத்துக்கள் சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
ஆதிபாம்பு.
கிராமத்துப்புழுதியோடு மேனாட்டூ
சிந்தனைகளும் உட்புகுந்து கோணங்கி
எனும் கலைஞனின் கைவரிகளில்
எழுத்து சிற்பங்களாய் நின்று வியக்கவைத்து
திகைப்பூட்டி புற வாழ்விலிருந்து நிலை குளைய
வைக்கியது
பல எழுத்தாளர்களின் ஒரு சில கதைகள் நம்மை வெளியே
விடாமல் நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில்
பிடித்து வைத்துக் கொள்வதுண்டு.
கோணங்கியின் ஒவ்வொரு வரிகளும், அடுத்தவரிக்குப் போக
விடாமல் பிடித்தாட்டுகிறது. ஒற்றை வரியே எங்கெங்கோ
இழுத்துப் போய் மனசை அலைக்கழிக்கிறது.
ஒவ்வொரு கதையும் புது வெள்ளத்தில் நிந்தி தத்தளித்து
கரையோறும் பரவசத்தை தருகின்றன.
இனி வருங்கால தலைமுறைக்கான
வாசிப்பு தளம்கோணங்கி.
காலங்கடந்து புதுமைப்பித்தன் கண்டு
கொண்டது போல
கோணங்கியை கண்டு கொள்ளாமல்
விட்டால்
இழப்பு தமிழ் சமூகத்திற்குத்தான்
கோணங்கிக்கு இல்லை.
அவனொரு சித்தன். இப்போதும் இருப்பில் இல்லை.
அவனுக்கு இறப்புமில்லை.
அவன் தனது ஒவ்வொரு சொட்டு
உயிர்த்துளியையும் வரி வடிவங்களாக
மாற்றி தமிழில் நடைபாதை விரித்து விட்டான்.
அதில் நடந்து பாருங்கள். தமிழையும்
உங்களையும் புதிதாக புதிய அனுபவமாக
உணர்வீர்கள்.