Monday, August 31, 2009

காத்திருத்தல்!

காத்திருத்தல்!

ஏதொன்றுக்கும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது
எப்போதும் ...

காலைக்கடன் கழிக்க
யாரேனும் கழிவறையில் இருந்தால்
யாரேனும் தினசரி படித்தால்
யாரேனும் குளித்துக்கொண்டிருந்தால்
பேருந்துக்காக
இருக்கை கிடைப்பதற்காக
இப்படி சில்லரை காத்திருத்தலில்லாமல்

சனி பெயர்ச்சிக்காக.
குரு பெயர்ச்சிக்காக,
திசை மாற்றத்திற்காக
காத்திருத்தல் வேறு

உதவுகிறேன் என்றவர்
பதிலுக்காக
நோய் குணமாக
பதவி உயர்வு வர
ஊதிய உயர்வுபெற

உரியவரை தொடர்புகொள்ள
காத்திருக்கும்படி செல்ஃபோன் தெரிவிக்கிறது
தூக்குப்போட புறப்பட்டவன்
என்ன ஆனான்
நாளை வரை காத்திருக்கும்படி
தொலைக்காட்சி தொடர் சொல்கிறது.

மாதக்கணக்கில் நடந்த போட்டியில்
யார் வென்றது
முடிவு அடுத்தவாரம் என்று அறிவித்து விடுகிறார்கள்
எல்லையில் பிடிபட்டவர்
தப்பினாரா? இல்லையா?
அடுத்த இதழில் என்கிறார்கள்

எதற்காவது
எப்போதும்
காத்திருத்தல்
நித்ய கர்மம்
நீண்ட துயர்

எதற்காகவும்
காத்திருக்க
வேண்டாதவர்
எத்தனைபேர்
இப்புவியில்?

பூவிழுமா? தலைவிழுமா?
சுண்டிவிட்ட காசு அந்தரத்தில்

விழுமா? விழாதா?
காத்திருக்கிறேன்
நெடுங்காலமாக ......
- வித்யாஷங்கர் -

7 comments:

  1. இது என்னையில இருந்து. சொல்லவே இல்லை. பதிவுலகுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நிதர்சனக் கவிதை...

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.. ஆனந்தவிகடனில் வெளிவந்த தங்கள் ‘சாமக்கொடை’ கவிதையை, எனது ஓவியத்துடன் எனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.சுட்டி இதோ..
    http://thamizhparavai.blogspot.com/2009/09/blog-post.html
    தங்களுக்கு ஆட்சேபமெனில் எடுத்துவிடுகிறேன்.
    நன்றி...

    ReplyDelete
  4. //சனி பெயர்ச்சிக்காக.
    குரு பெயர்ச்சிக்காக,
    திசை மாற்றத்திற்காக
    காத்திருத்தல் வேறு//

    ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

    ReplyDelete
  5. வாவ். அற்புதமான கவிதைகள். வாழ்த்துக்கள் வித்யா ஷங்கர்.
    தமிழ்ப்பறவை/வானம் வசப்படும் - வலை தளத்தில் இருந்த சாமக்கொடை மூலம் உங்களை அறிந்தேன்.

    --வித்யா

    ReplyDelete
  6. நல்ல காத்திருப்புதான்!

    ReplyDelete