Thursday, December 23, 2010

பெயர் தெரியா பூ பூத்தது

என் மேஜையில்

திடீரென முளைத்த

செடியில்

பெயர் தெரியா பூ பூத்தது



எனது தாடியில்

படிந்தது பச்சையம்



திடிர்ச் செடிக்கு

ஒரு பெயரும்

பூவுக்கு ஒரு பெயரும்

யாரேனும் சொல்லுங்கள்

........



நதியொன்று

சாலையைக் கடக்க முயன்று

தோற்று பின் வாங்கியது



பூனை நதியைக் குடித்து

சாலையைத் தின்று

பறந்தது வானில்

சிறகில்லாமலே

........



தோட்டக்கள் நிறைக்கப்பட்ட

துப்பாக்கி முன்

ஏராளமான பிணங்கள்

சிலவற்றின் கையில்

தோட்டாக்கள் நிறைந்த

துப்பாக்கியும் இருந்தன

........



உன் பெயர் சொல்லி

அழைத்தேன்

நீ திரும்பி பார்க்கவில்லை

யாரோ திரும்பி பார்க்க

எனக்கு வேறுதிசை நோக்குவது தவிர

வழியில்லை

........



அந்த ஆடு பூவைத்தின்று

புழுக்கை போட்டது

பூக்களாய்



பூக்களின் வாசணையில்

பித்தான ஆடு

தலை தெறிக்க ஒடியது

காடு விடுத்து

........



அவளின் கை ரேகை

விரல்கள் தாண்டி வளர்ந்தது



இப்போதெல்லாம்

ரேகை

இன்னொரு விரலாக

மாறிவிட்டது அவளுக்கு

........



பேருந்தில்

பியானோவை வசித்தவன்

ஒட்டுநரில்லாமலே

வாகனத்தை

விரும்பியதிசைக்கு

செலுத்துகிறான்

எந்த விபத்தும் நேராமல்

........



அவன்

இவன் ஆனான்



இவன்

இவன் அவன் ஆனான்



எவன்

எவன் ஆனான்



யாருக்கும்

தெரியா பெருங் குழப்பம்

........





டைந்து

கிடக்

கிறது

நாற்

காலி



எப்போதோ

யாரோ

அமர்ந்தது

Wednesday, December 22, 2010

கோவில்பட்டி குறிப்புகள்

முதலாம் வகுப்பு

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டையொட்டி அடுத்திருந்தது கோபாலகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை. ஒண்ணாம் வகுப்பு டீச்சர் சீதாலஷ்மி பாட்டி. அம்மாவுக்கு ஒருமுறையில் சித்தி. பள்ளிக்கு எதிரே எங்கள் வீடு. இடையில் ரோடு.

கொளுகொளுவென்று எளிதில் தூக்கி சுமக்க முடியாதவனாக நானிருப்பேனாம். அதனாலேயே செல்லமாக பாலய்யா (டி.எஸ்.பாலய்யா) அக்காக்கள் அழைப்பார்கள். பிடறி தாண்டி முதுகுவரை நீண்டு வளர்ந்த முடி. காலில் கொலுசு.

வீட்டின் பின்புறம் பூத்துக் குலுங்கும் கனகாம்பரச் செடியிலிருந்து பூப்பறித்து பள்ளிக்கு மேல் சட்டையில் முடிந்து எடுத்துப் போவேன். டீச்சர் பாட்டி தலையில் கிருஷ்ணர் கொண்டை போட்டு கட்டிய பூவை தலையில் வைத்து, சொம்பு ஒன்றை கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைப்பார். அம்மா புளிபோட்டு தேய்த்துக் கழுவி யாணைக்கிணறு தண்ணீர் நிரப்பி என்னிடம் கொடுத்தனுப்புவார். (இப்போது யாணைக்கிணறு தூர்ந்து போய் பாழுங்கிணறாக முள் மண்டி ஏ.கே.எஸ் தியேட்டர் பின்புறம் உள்ளது).

டீச்சரிடம் தண்ணீர் செம்பைக் கொடுத்ததும் அவர் மடியிலேயே தூங்கி விடுவேனாம். அப்புறம் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் மறுநாள் தான் ஸ்கூல்.

ராஜபாளையத்திலிருந்து பெரியம்மாவோ, ஏழாயிரம் பண்ணைகளிலிருந்து பாட்டி, தாத்தா, சித்தி இப்படி யார் வந்தாலும் ரோட்டை கடந்து வீட்டுக்குள் நுழையும் முன்பே வகுப்பிலிருந்து பார்த்தாலே தெரியும். அப்படியாரேனும் வந்துவிட்டால் டீச்சரிடம் சொல்லிவிட்டு வீடு கிளம்பிபோவேனாம். இதுதான் ஒண்ணாம் வகுப்பு படிப்பு.

கிருஷ்ணர் கொண்டையோடு என்னை மடியில் வைத்து பஸ் ஏஜண்ட் ராசாண்ணன் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருக்கிறார். போட்டோ எடுக்கும்போது நான் தூங்கியிருக்கிறேன்.

பிரிண்ட் போட்டபோது இறந்துபோன என்னை அவர் மடியில் வைத்திருப்பதுபோல வந்துவிட்டது.

அவ்வளவுதான் ராசாண்ணனுக்கு கோபமான கோபம். போட்டோவை கிழித்தெறிந்து ஸ்டுடியோவை உடைத்தெறிந்து விடுவேன் என்று ஒரே களேபரம்.

அப்புறம், ஸ்டுடியோக்காரர் காசுவாங்காமல் மறுபடியும் என்னை அழைத்து வரச் செய்து அவர் மடியில் உட்காரவைத்து படம் எடுத்து பிரிண்ட் போட்டுக் கொடுத்தாராம்.

நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்டுடியோக்காரர் இந்த தகவலைச் சொன்னார்.

தினமும் இன்டர்வெல் விட்டதும் எல்லோரும் வேப்பம் பூவை சேகரிப்போம். அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரும் ஹெட்மாஸ்டருமான கோபாலகிருணய்யர் அதை ஒரு துணிப்பையில் எடுத்துப் போய் வேப்பம்பூ ரசம் செய்து குடிப்பாராம் டீச்சர் சொன்னார்.

அண்ணன், சின்னக்கா, நான், தங்கை எல்லோருக்கும் இங்குதான் ஆரம்பக்கல்வி. இப்போது அது வளவு வீடாகிவிட்டது. அப்போது தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்க இருந்த மன்னன் டீஸ்டாலும் இப்போது இல்லை. ராசாண்ணனும் இல்லை.

Saturday, December 18, 2010

வேறொரு நாடகம்

கூச்சல்களால் நிரம்பி வழியும்

மது விடுதிகள்

இப்போது கூடுதலாக கிடைத்த

சலூனைப் போன்ற

ஆண்களுக்கான சுதந்திரவெளி



நீங்கள் நினைப்பது போல

இங்கு சந்தோஷம் மட்டுமே

நிரம்பி வழியவில்லை

விம்மல்களும்

தோல்விகளின் புலம்பல்களும்

சிதறியே கிடக்கிறது



புத்தனுக்கு எதிரான

ஆசைகளின் வேர்கள்

இங்கு மதுவார்த்து

வளர்க்கப்படுகின்றன

கூடவே வன்மங்களும்



கவிழ்ந்துபோன

கதாநாயகர்கள் காமெடியன்களாகி

கலாய்க்கிறார்கள்



இது ஒப்பனை கலைந்த

வேறொரு ஒப்பனை

வேறொரு நாடகம்

கடல் கன்னி அழைப்பு

கடலுக்குள் வா வா என்றழைக்கிறாள். கடலை விட்டு தொலைதூரமிருந்தாலும் தேடிவருகிறாள். வா முத்துக்கள் பவளப்பாறைகள் கடல்குதிரைகள் இன்னும் இன்னுமென்று ஏராளமாக உன் காலடிபடக் காத்துக்கிடக்கின்றன வா. சூரிய ஒளியே அறியாது கடலின் அடியாழத்தில் விளைந்த தானியக்குமரி காத்திருக்கிறாள் வா. விளைந்த சங்குகளில் தன் நாதத்தை மூல மந்திரமாக்கி ஒடுங்கி ஒரு சங்கில் உயிர் வாழும் சித்தன் உனக்கென ஒரு மந்திரத்தோடு காத்திருக்கிறான் வா.

அகல்யை அள்ளிய நீரில் காமுறச்செய்த இந்திர விந்து அடைக்கப்பட்ட சங்குள் கருவாய் வளர்கிறது. வந்தெடுத்து கப்பாற்று. வராக அவதாரத்தின் போது உண்டாக்கிய பாதாள லோகம் பார்க்கலாம் வா.

ஆழிப் பேரலையில் அள்ளிச் சென்ற மழலைகள் அங்கே குதூகலத்தி கொண்டாடுகின்றன வா. பூரண சந்திரனின் பௌர்ணமியை கபளீகரம் செய்த வெண் சங்கு விளிக்கிறது வா. கரையிலிருந்து அள்ளிச் சென்ற காதல் கதைகளின் பெருந்திரள் ஏடு பத்திரமாக இருக்கிறது வா. கற்பக விருஷ்ம் கைவிரித்து காத்திருக்கிறது வா. வந்து தழுவி ஐஸ்வர்யம் பெறு. சூட்சம சரீரியாகி உன் தழுவலுக்காக யுகாந்திரமாய் காத்திருக்கிறாள் வா. ஏ! கசனே உயிர் மீட்கும் மந்திரமறிந்த நித்ய பிரம்மச்சாரியே வா. உன் தேவகச்சயாணி திகைப்பூட்டும் பாடல்களையும் நனையும், நாட்டியங்களையும் கற்றுத் தேர்ந்து காத்திருக்கின்றாள் வா.

கால காலமாய் உன் காலடியைத் தொட்டு கொஞ்சி கூவி, அலறி கூப்பாடுபோட்டு அழைத்துச் கொண்டேயிருக்கிறாள் வா. ஒவ்வொரு அலையின் அழைப்பையும் நீ உதாசீனம் செய்தாலும் இரவு பகல் மழை வெயில் பாராமல் அலைஅலையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது அழைப்புகள்.

எவனும் அறியாத ரகசியங்களோடும் வனப்போடும் திமிரோடும் ஓயாத பெருந்துயரோடும் தீரா மோகத்தோடும் காத்திருக்கிறாள். நொடிக்கு நொடி அழைப்பு விடுத்து ஓயாத அலைகளோடு காத்திருக்கிறாள் வா.

எத்தனை உடல்கள் நனைந்தாலும். எத்தனை தூரம் கடந்தாலும், எத்தனை வயல்களில் ஒடினாலும் எத்தனை கைகள் அள்ளினாலும் எத்தனை கால்கள் மிதித்தாலும், கால தூரம் கடந்தும் குளிர்ச்சியை தனக்குள் ஒளிந்து வைத்திருக்கிறது ஆற்றுமணல் புதையலாய். தட்ப வெப்ப நிலையில் தன் சுயமிழக்காமல் காலங்காலமாய்.

அருவியின் தலைமகள். தனித்து ஒடிக் கொண்டே யிருக்கிறாள் பகவதியருளாய். பாவம் தீர்க்க பாண்டியன் வருவானென்று. கூடி நின்று கூட்டமாய் கவனம் கொள்கின்ற தாவரக்கூட்டம் மலையாள மண்ணில் திரண்ட மேகம் பொதிகையில் இறங்கி பொங்கி பொழிகிறது அருவியாய். யார் கண்ணிலும் படாத அரிய மூலிகைகளின் தலைதடவி வழிகிறது கவிதலையருவி. மாமரத்தில் சூட்சம சரீரியாகி அமர்ந்து சிரிக்கிறாள். பகவதி, சேரன் குடத்தில் இட்ட உயிர் மீட்க வருவோனை எதிர்நோக்கி.

Friday, December 17, 2010

இது கவிதையல்ல

மழைக்கு

குடை

வெயிலுக்கு

குடை

மற்றநாளில்

குடைக்கு?



.......



தொலைக்காட்சி

பெண் வர்ணனையாளரை

நிர்வாணப்படுத்தி

சுட்டது

இலங்கைராணுவம்

ஏன்

நிர்வாணப்படுத்தி....

பாவம்

இசைப்பிரியா

உன்மகள் போல

தங்கை போல

படவில்லையா?

அவளின்

கடைசி முணகல்

தமிழ்

இந்தக் காட்சியை

கனிமொழி பார்த்திருப்பாரா?

ஜெகத் கஸ்பர்? திருமாவளவன்?



.......



சீமானுக்கும்

ராசாவுக்கும்

ஒரே வயசு இருக்கும்

கோடிகளை

குவித்ததால்

ராசா உறவு

சீமான் எதிரி



.......



வாலி

வைரமுத்து

பா.விஜய்

இவங்களுக்கெல்லாம்

இலங்கைன்னு ஒரு நாட்ல

தமிழர்கள் இருந்தாங்கன்னு

தெரியுமா?

யார் சாகடிச்சது தெரியுமா?



கொலைகாரனை விட

கொடியவன்

அதை பார்த்தும்

வாய் பொத்தி இருப்பவன்



பாரதி சொன்னான்

படிச்சவன்

பாவம் செய்தால்

ஜயோன்னு போவான்



இவர்களிடம்

தயாராக

இருக்கிறதாம்

அவருக்கான

அஞ்சலிக் கவிதை



.......



இறுதித் தமிழன் இருக்கும் வரைக்கும்

இருக்கும் உன் பெயரும்

ஆயுத எழுத்தாய்

(இது யாருக்கு

பொருந்தும்)



.......



புத்தக வெளியீடுகளும்

விசிலடிக்கும்

ரசிகர்களும்

வேறொரு காமெடி



.......



பயமாயிருக்கிறது

நொண்டி நாயென்று

பின்னொருநாள்

திட்டுவாங்கப் போகிறவரை

நினைத்தால்



வித்யாஷங்கர்



.......

Thursday, December 16, 2010

விசாரணை

சைக்கிளில்

விளக்கு எரியவிடாமல்

போனவனை

போலீஸ் மடக்கி விசாரித்து

பீடி வாங்கிக் கொண்டு

விட்டது



கஞ்சா கடத்தியவனை

மிரட்டி

காசு வாங்கிச் சென்றது



மாமூல் ரவுடியை

மடக்கி

மாமூல் பெற்றது



கோடி கோடியாய்

ஊழல் செய்தவனை

கும்பிட்டு நின்றது



சிரித்துக் கொண்டே

புகைப்படக்காரர்களோடு

போலீசோடு

போஸ் கொடுக்கிறார்கள்

கோடிக் கொளையர்கள்

வார்த்தைகள்

எனது வார்த்தைகள்

சுவாசம் போல தன்னியல்பாய் உள்உருவாகி

வெளிவருகின்றன



எதை எப்படி என்

சொல்வதென்ற தீர்மானத்தை மீறி

நடைபோடுகின்றன



யார் யார் வார்த்தைகளோ

மனதில் விழுந்து

உருமாறி

தனக்கென உருவெடுத்து

தாளகதியமைத்து

நடனமிடுகின்றன



மேடைக்கு சொந்தமில்லா

கால்கள்

விட்டுச் செல்லும்

எஞ்சிய இசையையும்

தாளலயத்தையும்



பார்வையற்ற

பார்வையாளன் ரசிக்க